உடல்நிலையை காரணம் காட்டி நடராஜன் தப்ப வாய்ப்பிருக்கிறதா?.... என்ன சொல்கிறது சட்டம்?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதை காரணம் காட்டி ம.நடராஜன் சிறை செல்வதில் இருந்து விலக்கு பெற வாய்ப்பு இருக்கிறதா. சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
Recommended Video
சென்னை : சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலாவின் கணவர் ம. நடராஜன் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறைத் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்பு இருக்கிறதா சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
லண்டனில் விலையுயர்ந்த லக்ஸஸ் சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், தினகரன் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சிறையில் சரணடைய கோரிய காலஅவகாசத்தையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது இதனால் அவர் உடனடியாக சிறைக்கு சென்றே ஆக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் நடராஜன் சிறை செல்லாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கிறதா. அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க இருக்கும் வாய்ப்புகள் என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம். வழக்கறிஞர் தமிழ்மணி இது குறித்து கூறுகையில் : மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. கீழ் நீதிமன்றத் தீர்ப்பில் தவறு என்று நடராஜன், பாஸ்கரன் தரப்பு வாதாடியது அதனை ஹைகோர்ட் ஏற்கவில்லை.
உடனே ஆஜராக வேண்டும்
மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்திருந்ததால் இருவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து ஹைகோர்ட் அப்போது உத்தரவிட்டிருந்தது. ஆனால் இப்போது தீர்ப்பு வந்துவிட்டதால் அவர்கள் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இவர்களே இன்றோ, நாளையோ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
வேறு வழியில்லை
உச்சநீதிமன்றத்தில் இவர்கள் மேல்முறையீடு செய்வதாகச் சொன்னாலும் மேல்முறையீடு செய்யும் வரை நடராஜனும், பாஸ்கரனும் சிறையில் இருப்பது கட்டாயமாகிறது. எனவே இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அல்லது சரணடைந்து பெயில் பெற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
தப்ப வாய்ப்பு இருக்கிறதா?
ஒரு வேளை நடராஜன் உடல்நிலையைக் காரணம் காட்டினாலும் வீட்டில் ஓய்வெடுப்பதை சிறையில் உள்ள மருத்துவமனையில் குற்றவாளியாக வந்து ஓய்வெடுங்கள் என்றே அதிகாரிகள் சொல்லக்கூடும். அதே நேரம் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தலையிட் நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது, ஆனால் அதற்கு இவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்,அதனை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன.
2 நாட்கள் மட்டுமே தள்ளிப்போடலாம்
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் போட்டு ஸ்டே கேட்கலாம், ஆனால் அதுவரை அவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும். ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ நினைத்தால் தண்டனையை நிறுத்தி வைக்கலாம், அவர்கள் முடிவு எடுக்கும்வரை இடைக்காலத் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. உடல்நிலையைக் காரணம் காட்டி நடராஜன் 3 நாட்கள் வரை தள்ளிப் போடலாம் ஆனால் 6 மாதம் கழித்து வருகிறேன் என்றெல்லாம் சொல்லும் வாய்ப்பு அவருக்கு கிடையாது அதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்தின் கையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.