நெடுவாசல் போராட்டமும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல முடித்து வைக்கப்படுமோ?
நெடுவாசல் போராட்டத்தையும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல கட்டாயப்படுத்தி முடித்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கட்டாயமாக முடித்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்த போராட்டத்தையும் வாபஸ் பெற வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது.ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நெடுவாசல் மக்கள்,இந்த திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக்கூறி 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாட்டு பாடியும், கும்மியடித்தும் போராட்ட களத்தை சுவாரசியமாக மாற்றினர். பவளத்தான்புரம், அன்னவயல், புல்லான்விடுதி ஆகிய கிராமங்களில் இருந்து விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஏர்கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அங்கேயே சமைக்கப்பட்டு சுடச்சுட காய்கறி பிரியாணி உணவு வழங்கப்பட்டது. போராட்டத்தில் இளைஞர்கள், விவசாயிகள், விவசாயம் சார்ந்த நாட்டு புறப்பாடல்களை பாடினர். ஒரு குடும்பம் போல போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நெடுவாசல் போராட்டக்குழு
இதனிடையே நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் இன்று சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு பிரதிநிதிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரியதாக தெரிவித்தனர். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசு அனுமதிக்காது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்ததாகவும் முதல்வர் உறுதியளித்ததாகவும் பிரதிநிதிகள் கூறினர். போராட்டத்தை தொடர்வது குறித்து நெடுவாசல் மக்களின் கருத்தை அறிந்த பிறகே முடிவு செய்ய இயலும் என போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.
கைவிட மாட்டோம்
இதனிடையே முதல்வரின் உறுதிமொழியை ஏற்க நெடுவாசலில் போராட்டத்தில் உள்ள மக்கள் மறுத்து விட்டனர். மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை பேராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
போராட்டம் நீடிக்கும்
மாநில அரசு அறிவித்தது மகிழ்ச்சியளித்தாலும், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் வலியுறுத்தல். மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்வோம் என்றும் கூறி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்ட குழாய்களை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
நெடுவாசல் போராட்டம் தீவிரமானதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக்காரர்களிடம் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சொன்ன எதையும் கிராம மக்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை வந்த நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகளிடமும் விஜயபாஸ்கர் பேசியுள்ளார். இதன் பின்னரே முதல்வரை பாராட்டும் வகையில் பிரதிநிதிகள் பேட்டியளித்துள்ளனர்.
கட்டாயமாக முடிக்க திட்டம்
இதனைப் பார்க்கும் போது நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தை கட்டாயமாக முடிக்க வைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் துறைக்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மெரீனாவில் நடத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கட்டாயமாக முடித்து வைத்தது போல நெடுவாசல் போராட்டமும் முடித்து வைக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.