நிர்மலா தேவி கட்டுரைக்காக புகார் ஏன்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஆளுநர் மாளிகை.. பரபர அறிக்கை
Recommended Video
சென்னை: நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் மாளிகை முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநரை தொடர்புபடுத்தி நக்கீரன் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின்பேரில், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அன்றைய தினமே அந்த வழக்குகளை ரத்து செய்து நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை இன்று ஒரு விளக்க கடிதத்தை வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில், கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகை வந்ததே கிடையாது. ஆளுநர் என்பவர் மாநிலத்தின் முதல் பிரஜை. அப்படிப்பட்டவருக்கு எதிராக ஒரு செய்தி வெளியிடும்போது, கூடுதல் பொறுப்புணர்வோடு, விசாரித்து செய்தி வெளியிட வேண்டும். அப்படியான நடவடிக்கையில் நக்கீரன் இதழ் ஈடுபடவில்லை என்பதால், புகார் அளிக்கப்பட்டது.
ஆளுநர் மாளிகை கவுரவத்தை குலைக்கும் எந்த நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநரையோ, அவரது செயலாளரையோ நிர்மலா தேவி கடந்த ஓராண்டில் சந்திக்கவேயில்லை. இதுதான் ஆளுநர் மாளிகையின் நீண்ட செய்திக்குறிப்பின் சாராம்சமாகும்.
தமிழக பெருமை
ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழு தகவல் இதோ: இந்தியா சிறந்த தேசம். தமிழகமும் கலாச்சாரத்தில் சிறந்த மாநிலம். திருவள்ளுவர் முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரையிலான தத்துவ ஞானிகளை தந்த மாநிலம் தமிழகம். இம்மாநில மக்கள் உண்மை, நன்மைகளின் பக்கம்தான் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஊடக சுதந்திரம்
அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு கல்லூரி உதவி பேராசிரியரான திருமதி.நிர்மலா தேவி என்பவருடன், ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்துவது என்பது முற்றிலும் பொய்யானது. மாநிலத்தின் முதல் குடிமகனாக இருந்தபோதிலும், ஆளுநர் மீது தொடர்ச்சியாக ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்ததை, ஆளுநர் மாளிகை வெகு காலமாக பொறுத்திருந்தே பார்த்து வந்தது. இதன்பிறகுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்பது நகைப்புக்குரியது.
ஆறு மாதங்கள் பொறுமை
எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு எல்லை (limit) உள்ளது. ஆளுநர் மாளிகையும்கூட, இந்த விஷயம் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மரியாதையுடன் கூடிய மவுனத்தில் இருந்தது. ஆனால், இது தொடர்கதையாகிவிட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. பேராசிரியை தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டுள்ளது. ஆனால், நக்கீரன் இதழில் மஞ்சள் பத்திரிகை போன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாக்குமூலம் எங்கே
நாங்கள் புலனாய்வு ஊடகம் என கூறிக்கொள்வோர், நிர்மலா தேவி காவல்துறையிடம் வழங்கியுள்ள உண்மையான வாக்குமூலம் குறித்து கவலைப்படவேயில்லை. ஆனால், ஊடக அறத்தை துறந்துவிட்டு அந்த கட்டுரை வெளியிடப்பட்டது. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஒருபோதும், ராஜ்பவனில் கால் வைத்ததே இல்லை. ஆளுநருடனோ அல்லதது அவர் செயலாளருடனோ நிர்மலா தேவி கடந்த ஓராண்டில் சந்திப்பு நிகழ்த்தவே இல்லை.
கெஸ்ட் ஹவுஸ் போகலியே
மதுரையில், அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநர் காமராஜர் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசுக்கு செல்லவே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்தான் அந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது ஆளுநரின் செயலாளர் விழாவிற்கே வரவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, வெறுப்பு் உணர்வு காரணமாகத்தான், நக்கீரனில் இப்படி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது.
ஆதரவால் வருத்தம்
இப்படி போலியான, மஞ்சள் பத்திரிகை தரத்திலான கட்டுரைக்கு மரியாதைக்குரிய நபர்களும் ஆதரவு அளிப்பது வருத்தம் தருகிறது. அவர்களுக்கு நிஜம் தெரியவில்லை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளான சுப்பிரமணிய பாரதி, சிதம்பரனார், தலைவர்களான பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னாக்களான எம்ஜிஆர், அப்துல் கலாம் போன்றோர் தங்கள் கருத்துக்கள், செயல்கள், பேச்சு மற்றும் எழுத்துக்களால் தமிழகத்தை புகழடையச் செய்துள்ளளனர். எனவே, அதிகார துஷ்பிரயோகத்தில் ஆளுநர் மாளிகை ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், தொடர்ச்சியாக சேற்றை வாரி இறைத்ததால்தான், சட்டப்படி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.