நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம்.. ஹைகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்!
நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.
சென்னை: நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நக்கீரன் வார இதழ் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என கருதுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி அவதூறு வழக்கு பதிவு செய்யாமல் ஆளுநரின் பணிக்கு இடையூறு என வழக்கு பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் துணை செயலளார் அளித்த புகாரில் எப்படி சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்யமுடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆளுநரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினால்தானே 124ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்?
இதற்கு ஐபிசி 499, 500 பிரிவின் கீழ்தானே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து நக்கீரன் நிறுவன ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் ஜாம்பஜார் ஆய்வாளர் உத்தரவாதம் அளித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.