‘லைப் அகெய்ன்’ பற்றி பிரதமருடன் பேசினேன்.. மற்றபடி மீண்டும் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை: கௌதமி
தனது 'லைப் அகெய்ன்' புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு தொடர்பாகவே பிரதமரைச் சந்தித்ததாகவும், மற்றபடி மீண்டும் பாஜகவில் சேரும் திட்டம் இல்லை என நடிகை கௌதமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து தான் மீண்டும் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை நடிகை கௌதமி மறுத்துள்ளார். தனது லைப் அகெய்ன் புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு தொடர்பாகவே பிரதமரைச் சந்தித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் மூலம் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார். இது தவிர நடிகர் கமல் படங்கள் சிலவற்றிற்கு அவர் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரதமருடன் சந்திப்பு...
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் கௌதமி. பிரதமருடனான சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
|
திரில் சந்திப்பு...
கூடவே இந்தச் சந்திப்பு குறித்து, "பிரதமர் மோடியைச் சந்தித்தது திரில்லாக இருந்தது. நட்சத்திரங்களைத் தொடும் உயரத்துக்கு இந்தியா செல்லும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
|
மீண்டும் பாஜக?
பிரதமரை ஏன் சந்தித்தேன் என்பது குறித்து ஆரம்பத்தில் அவர் விளக்கம் அளிக்காததால், அவர் மீண்டும் பாஜகவில் இணைய இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. அதனை நிரூபிப்பது போல், பிரதமரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை கௌதமி சந்தித்தார்.
லைப் அகெய்ன்...
இந்நிலையில், பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "லைப் அகெய்ன் எனும் புற்று நோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன். இது குறித்து பேசவும் வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் ரீதியில் எதுவும் பேசவில்லை" என்றார்.
காரணம்...
பல ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் உறுப்பினராக இருந்தவர் கௌதமி. பின்னர் சிலப்பல காரணங்களால் அக்கட்சியில் இருந்து அவர் விலகினார். எனவே தான் பிரதமரைச் சந்தித்தும் அவர் மீண்டும் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அர்ப்பணிப்பு...
ஆனால், "பாஜகவில் இருந்து வெளியேறிய பின், வேறு எந்த கட்சியிலும் நான் சேரவில்லை. எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். 24 மணி நேரமும் அதுதான் எனது கவனம்" எனத் தெரிவித்துள்ளார் கௌதமி.