தமிழக அமைச்சரவை கூட்டம்... ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா ஓபிஎஸ்?
முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் ஓபிஎஸ் அமர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். அன்றைய தினம் நள்ளிரவே முதல்வராக பதவியேற்றார் ஒபிஎஸ். 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
6ம் தேதியன்று ஜெயலலிதாவின் உடன் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்றைய தினமே காட்சிகளும் மாறின. அடுத்த மரியாதை யாருக்கு என்பதை சொல்லாமல் சொல்லியது அங்கு அரங்கேறிய காட்சிகள்.
ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்குகள் செய்து அடுத்த வாரிசு தான்தான் என்று சொல்லாமல் சொன்னார் சசிகலா. அதன்படியே கடந்த இரு தினங்களாக போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஓபிஎஸ், முக்கிய அமைச்சர்கள் சசிகலா உடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணீர் காட்சிகள்
2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்காக ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் பதவியேற்றனர். அப்போது கண்ணீரும் கம்பலையுமாக கேவி கேவி அழுது பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதனை ஊடகங்கள் கிண்டலடித்தன.
முதல்வர் இருக்கை காலி
முதல்வர் அறைக்கு செல்லாமலும், முதல்வர் ஜெயலலிதாவின் இருக்கையில் அமராமலும் ஆட்சி நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். அமைச்சரவை கூட்டத்தின் போதும், பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் ஜெயலலிதாவின் படத்தை முன்னாள் வைத்து பய பக்தியோடு பணிவாட்சி நடத்தினார் பன்னீர் செல்வம்.
அம்மா நாற்காலியில் அமர்வாரா?
இரண்டு முறை தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய ஓ.பன்னீர் செல்வம், தன்னையும், தனது ஆட்சியையும் அம்மா கண்காணிக்கிறார் என்பது தெரிந்ததால் முதல்வர் நாற்காலியில் அமராமலே ஆட்சி நடத்தினார். இம்முறை அப்படியில்லை. ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இனி முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த தடையும் இருக்காது என்றே கூறலாம்.
முக்கிய தீர்மானங்கள்
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், காவிரி விவகாரம், அரசு நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீட்டில் அமர்வாரா ஓபிஎஸ்
ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலி இப்போது காலியாக உள்ளது. அந்த நாற்காலி நிரந்தரமாக காலியாக இருக்குமா? அல்லது ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் என்ற கம்பீரத்துடன் அமர்வாரா? என்பதை காலம்தான் பதில் சொல்லும். இன்றைய அமைச்சரவை கூட்டமே ஓ.பன்னீர் செல்வத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தி விடும் என்றே கூறலாம்.