"மோடிக்கு மதிப்பு போச்சு"... "பல்டி" அடிக்கப் போகிறாரா பாரிவேந்தர்?
காரைக்குடி: இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியிலிருந்து விலகப் போகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது திடீர் பேச்சு அமைந்துள்ளது. மோடிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வந்து விட்டது என்றும், போன கூட்டணி பாஜகவுடன், அடுத்த கூட்டணி யாருடனோ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டவர் பாரிவேந்தர். சமீபத்தில் கூட டெல்லிக்கு விஜயகாந்த் போயிருந்தபோது அவரது குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் காரைக்குடி வந்த அவர் அங்கு மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மாவட்டம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அதில் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில்தான் வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கலந்தாய்வு கூட்டத்தைப் போல், இன்னும் இரண்டு மாநாடுகள் நடத்த உள்ளோம்.
மோடியின் கடந்த ஒரு ஆண்டு கால ஆட்சியில் வெளிநாட்டினரிடம் அவர் மீது மதிப்பு உயர்ந்து இருக்கிறது. ஆனால், நம்நாட்டில் அவர் கொடுத்த வாக்குறுதி பல நிறைவேற்றபடாததால், அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்தோம். ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. மக்கள் ஓட்டுக்கு காசு வாங்காமல் வாக்களித்தால் மட்டுமே மக்களிடம் யாருக்கு மரியாதை இருக்கிறது என்ற உண்மை தெளிவாகும் என்று கூறினார் பாரிவேந்தர்.
கூட்டணி குறித்து உறுதியாக சொல்ல முடியாது, மோடி மதிப்பு இறங்கி விட்டது, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று இவர் கூறுவதைப் பார்க்கும்போது கூட்டணி மாறப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.