ரஜினி காங்கிரஸில் சேருவாரா.. திருநாவுக்கரசர் என்ன சொல்கிறார்?
சென்னை: ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்யின் மாவட்ட தலைவர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் திருநாவுக்கரசர். அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்.
காங்கிரஸில் சேர மாட்டார்
ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டார் என்பது எனது கணிப்பு. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் ஆரம்பிப்பாரே தவிர காங்கிரசிலோ, பா.ஜ.க.விலோ இணையமாட்டார்.
பாஜகவின் நாடகம்
தலித் சமுதாய ஜனாதிபதியை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். ஏதோ தாங்கள்தான் தலித் சமுதாயத்தினரை உயர்த்துவது போல நாடகமாடுகிறது பாஜக. பாஜக புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
தலித்துகளை கொடுமைப்படுத்தி விட்டு
உண்மையில் கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தலித்துகளும், சிறுபான்மையினரும் பல்வேறு கொடுமைகளுக்குள்ளாகியுள்ளனர். தலித் சமூகத்திற்கு எதிரான கற்பழிப்பு, கொள்ளை பல மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
யோகாவில் மதம் ஏன் கலக்க வேண்டும்
யோகாசனம் என்பது பல காலமாக உள்ள ஒரு கலை. இதை எந்தக் கட்சியும் தனக்கு சொந்தமாக்க முடியாது. பாஜக இதில் கொண்டு போய் மதத்தை திணிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார் திருநாவுக்கரசர்.