"ரஜினி அரசியலுக்கு வந்தால் தலித்துகளுக்கு பேராபத்து.." வி.சி.கவில் ஒரு எதிர்ப்பு குரல்
ரஜினியின் அரசியல் பிரவேசம் தலித் மக்களுக்கு பேராபத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலை இன்னோரு சினிமா பிராஜெட்க்டாகவே பார்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள விசிக கட்சியின் பிரமுகர் ரவிக்குமார், அவரின் அரசியல் பிரவேசம் தலித்துகளுக்கு பேராபத்து என்றும் கூறியுள்ளார்.
ரஜினி தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் வாயிலாக தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த மே மாதம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக தனது ரசிகர்களை இம்மாதம் இறுதி வரை அவர் சந்தித்து வருகிறார். மேலும் தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் தலித் மக்களுக்கு பேராபத்தாக முடியும் ஏழை எளிய மக்களின் காவலராகத் திரையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக அரசியல் பலம்பெற்றது ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது. ரஜினியின் பேச்சு அரசியலை அவர் இன்னொரு சினிமா ப்ராஜெக்டாகவே பார்க்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது, என பேஸ்புக்கில் விமர்சித்துள்ளார்.
தமிழக தலித் மக்கள் சினிமா மாயையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் வந்துள்ளது. அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றுவதற்கு மாறாக மீண்டும் ரசிகர்களாக்குவது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கும் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியலைப் புரிந்துக்கொள்ள ரானடே குறித்த கட்டுரையில், நாயக வழிபாடு பற்றி அம்பேத்கர் கூறியுள்ளவற்றைப் படிக்கவேண்டும், என்றும் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்துள்ள நிலையில், ரவிக்குமாரின் இந்த கருத்து கட்சிக்குள் உள்ள முரண்பாட்டை படம்பிடித்து காட்டியுள்ளது.
பல ஜாதி, மதம் என்று பிளவுப்பட்டுள்ள ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற ரஜினிகாந்த் முயற்சி செய்து வரும் நிலையில், அவரின் அரசியல் பிரவேசம் ஜாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகிறது.