ராமஜெயம் கொலை வழக்கு... சிக்காத கொலையாளிகள்... நாளை சிபிஐக்கு மாறுகிறது?
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளின் நிழலைக் கூட நெருங்கமுடியாமல் தவிக்கிறது சிபிசிஐடி போலீஸ். அக்டோபர் 28ம் தேதி குற்றவாளியை ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 50. கடந்த, 2012, மார்ச், 29ம் தேதி, கொடூரமாக கொல்லப்பட்டார். ஆசிட் ஊற்றப்பட்டு கட்டுக்கம்பிகளால் அவரது உடல் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்கி வரும் சிபிசிஐடி போலீசார் சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், வழக்கு விசாரணயை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது ஆஜரான சிபிசிஐடி போலீசார், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்றும், விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். கடந்த இதனை கடந்த ஜூன் 12ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, குற்றவாளிகளை கண்டறிய ஜூலை 24ம் தேதி வரை சிபிசிஐடி க்கு காலக்கெடு அளித்து தீர்ப்பு வழங்கியது.
3 மாதம் அவகாசம்
இந்நிலையில் கடந்த ஜூலை 24ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற்போது மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, சிபிசிஐடியின் விசாரணையைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி, மேலும் 3 மாதங்கள் இறுதி அவகாசம் அளித்து, அக்டோபர் 28ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, வழக்கை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
உண்மை கண்டறியும் சோதனை
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் இருந்தவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினர். கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை அவரது உதவியாளர்கள் நந்தகுமார், 'கேபிள்'மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு நாட்களாக, சென்னை, சிபிஐ அலுவலகத்தில், இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ராமஜெயம் வழக்கு மீண்டும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாறிவிட்டது.
அட்டாக் பாண்டியிடம் விசாரணை
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ‘அட்டாக்' பாண்டி கைது செய்யப்பட்டவுடன், அவருக்கு இந்தக் கொலை பற்றித் தெரியுமா என்று இரண்டு நாட்கள் எஸ்.பி. அன்பு தலைமயிலான குழுவினர் மதுரைக்கு வந்து அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடத்தினர். அதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லையாம்.
தொந்தரவு செய்வதாக வழக்கு
இந்த நிலையில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக், பெரியசாமி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் திருச்சி சிபிசிஐடி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார். எது சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டால் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். விசாரணைக்காக எங்களுக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது. எனவே, விசாரணை என்ற பெயரில் எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர். இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நவம்பர் 16ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
நாளை கிளைமேக்ஸ்
இதனிடையே உயர்நீதிமன்றக்கிளை கொடுத்த கெடு நாளை அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. குற்றவாளிகள் இவர்கள்தான் என்று சந்தேக லிஸ்ட் கூட தயாரிக்கவில்லையாம் சிபிசிஐடி போலீஸ். எனவே நீதிபதியிடம் மீண்டும் அவகாசம் கேட்டால், நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்ற அச்சத்தில் உள்ளாராம் எஸ்.பி. அன்பு.
குற்றவாளி யார்?
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று தெரியாமல் திண்டாடுகிறார்களா? அல்லது குற்றவாளி யார் என்று தெரிந்தும் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ? நாளைய தினம், இந்த வழக்கு உயர்நீதிமன்றக்கிளையில் விசாரணைக்கு வரும் போது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.