ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற ஜெ. ஒத்துழைப்பு தேவை: சதானந்த கவுடா பேட்டி
சென்னை: ராயபுரம் ரயில் நிலையத்தை சென்னையின் முக்கியமான மூன்றாவது ரயில் முனையமாக மாற்றுவது குறித்து ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா இன்று நேரில் ஆய்வு செய்தார். தேவைப்படும் நிலத்தை பெற தமிழக முதல்வரிடம் கோரிக்கைவிடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற, ரயில்வே நிர்வாகம் ஒரு வரைபடம் தயாரித்துள்ளது. இதில், 9.27 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே, இத்திட்டம் சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிலங்கள், இதற்காக கேட்கப்படுகின்றன.
ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தில் 62 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களும் அடங்கும். இந்த நிலங்களை திரும்ப பெற்று, திட்டத்தை செயல்படுத்தினால், 5000 ச.மீ., மட்டும் கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்று ரயில் பயணிகள் உரிமைகள் தீர்வகம் கூறியது.
இந்நிலையில் இன்று சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ஆய்வு செய்தார். அப்போது மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், சென்னை மேயர் சைதை துரைசாமி, ரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு நிருபர்களிடம் கவுடா கூறுகையில் "ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்க கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. தமிழக அரசு நிலம் ஒதுக்கினால், ராயபுரத்தில் முனையம் அமைக்கப்படும். தமிழக அரசு நிலம் ஒதுக்க கேட்டு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுத உள்ளேன்" என்றார்.
ஏற்கனவே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் முக்கிய முனையமாக உள்ள நிலையில் ராயபுரம் மூன்றாவது முனையமாக உருவெடுக்க உள்ளது. அப்போதுதான் பிற இரு நிலையங்களிலும் ரயில் டிராஃபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரத்தில் போதிய இடம் இருப்பதால் ராயபுரத்துக்கு பதிலாக அங்கு 3வது முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்து கிளம்பி சென்றால் சென்னை நகரின் உள்பகுதிகளில் வசிப்போர் அவதிப்பட வேண்டும் என்பதால் தாம்பரம் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.