ரெய்டுக்கெல்லாம் அசரும் கூட்டமா இது... என்ன தான் நடக்கும்?
சசிகலாவின் சொந்த பந்தங்களை வருமான வரித்துறையினர் தோண்டினாலும் இதற்கெல்லாம் அசருபவர்களா இவர்கள் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.
Recommended Video
சென்னை : சசிகலாவின் சொந்த பந்தங்களை அலேக்காக மடக்கிப் பிடிக்கும் விதமாக வருமான வரி சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் இது போன்ற வருமான வரி சோதனைகளுக்கெல்லாம் அசரும் கூட்டமா இது என்ற கருத்து பலருக்கும் எழாமல் இல்லை.
மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா நடராஜனை திருமணம் செய்து கொண்டு சென்னை வந்து வீடியோ கடை நடத்தி வந்தார். அப்போது ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவுடன் நெருக்கமான சசிகலா நாளடைவில் தனது கட்டுப்பாட்டில் அவரை கொண்டு வந்தார்.
தாய் இழந்து இருந்த ஜெயலலிதா தனது வீட்டு வேலைகளுக்கு மற்றவர்களை சார்ந்து இருந்ததால் இதனை பயன்படுத்தி அவருடைய வீட்டிற்குள் நுழைந்தார் சசிகலா.
ஜெவிடம் நெருங்கிய சசிகலா
சசிகலா ஜெயலலிதாவுடன் நெருக்கமானது, அவருடைய குடும்ப கிளை உறவுகளுக்கு மிகவும் உதவியாகிப் போனது. ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்தி அதிகாரம் செய்ததோடு சசிகலா குடும்பத்தினர் கணக்கில் அடங்காத சொத்துகளை குவித்தனர். மன்னார்குடி குடும்பம் ஒரு மினி அதிகார மையமாகவே செயல்பட்டது என்றும் கூட சொல்லாம்.
சசிகலா பிடியில் ஜெயலலிதா
சசிகலா குடும்பம் கைகாட்டும் நபருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, இவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு வேண்டிய பதவி உயர்வு என்று கொடிகட்டி ராஜ்ஜியம் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலுமே சசிகலா குடும்பத்தினர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். ஜெயலலிதாவின் கோபப் பார்வை படும்போதெல்லாம் சசிகலாவின் உறவினர்கள் கைது நடவடிக்கை என்பது இருந்திருக்கிறது.
ஜெயிலுக்கும் போயாச்சு
ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கு, அந்நிய செலாவணி மோசடி வழக்கு என்று வழக்கிற்கு மேல் வழக்கு சிறைக்கு செல்வது என்று சசிகலா குடும்பத்தினர் அனைத்தையுமே பார்த்துள்ளனர். சசிகலா குடும்பத்தில் லேட்டஸ்ட் புது வரவுகளான இளவரசியின் மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளிலும் கடந்த ஆண்டு சோதனை நடந்தது. அப்போதும் இது பாஜகவின் அழுத்தம் காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று குற்றம்சாட்டப்பட்டது.
என்ன நடந்தாலும் அசராதவர்கள்
இந்நிலையில் இன்று சசிகலா குடும்பத்தின் ஆணி வேர் முதல் புதிய கிளைகள் வரை என அக்குவேறு ஆணி வேறாக வருமான வரி அதிகாரிகள் பிரித்து மேய்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அசறும் கூட்டம் இது இல்லை என்பது தான் கடந்த கால சோதனைகளும், வழக்குகளும் உணர்த்துகின்றன. என்ன தான் அழுத்தம் கொடுத்தாலும் தங்களின் அதிகாரத்தை இவர்கள் விட்டுக்கொடுத்து செல்வார்களா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.
பயன் தராது என கருத்து
சசிகலா என்னும் வேரில் இருந்து கிளைகளான நடராஜன், திவாகரன், தினகரன், சந்தரவதனம், டாக்டர் வெங்கடேஷ், விவேக், இளவரசி என்று அனைவரையும் வளைத்துப் போட்டுள்ளது வருமான வரி சோதனை. இதே போன்று அதிமுகவின் ஆதரவு ஊடகங்களாக இருந்தாலும் தற்போது அரசிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் என எங்கெங்கெல்லாம் சசிகலாவின் வாடை வீசுகிறதோ அனைத்து இடத்திலும் தோண்டித் துருவும் அதிகாரிகளின் சோதனை எந்த பயனையும் தரப்போவதில்லை என்று முழக்கமிடுகின்றனர் ஆதரவாளர்கள்.