ராமதாஸ், குரு முறைப்பு.. பதற்றத்தில் விஜய்காந்த் மச்சான் சுதீஷ்
சேலம்: இழுத்துக்கோ.... பறிச்சிக்கோ என்றிருந்த தொகுதி சேலம்... கடைசியில் தேமுதிகவின் வசம் வந்துவிட்டது.
பாமகவின் அருள் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு வேலைகளை தொடங்கிய பின்னர் அது தேமுதிக வசமானது. இதையடுத்து அந்த தொகுதியில் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்டது போலவே விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக இளைஞரணிச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டார்.
கூட்டணியில் உள்ள பாமகவினர் கோபத்தில் இருந்தாலும் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தேமுதிகவினர்.
நம்பிக்கை சுதீஷ்
கடந்த 2009ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் கண்ட சுதீஷ் இம்முறை சேலத்தில் போட்டியிட முடிவெடுத்த காரணம் ஜோதிட நம்பிக்கைதானாம். ஐந்தெழுத்துள்ள ஊரில் நின்றால் ராசி என்பதுதான் இந்த முடிவுக்கு காரணமாம்.
பாஜக அலை
சேலம் ஆடிட்டர் ரமேஷின் மரணத்தினால் ஏற்பட்டுள்ள அலையை தனக்கு சாதகமாக்க முடிவு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் சுதீஷ். முதற்கட்டமாக ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.
வாக்காளர்களை கவர
இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் தினசரி கல்லூரி வாசலில் நின்று ஓட்டுக்கேட்கத் தவறுவதில்லை சுதீஷ். அதேபோல காலையில் நடைபயிற்சிக்குப் போகும் போது மூத்த வாக்காளர்களை கவரும் வகையில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வாக்கு சேகரிக்கிறார்.
பாமகவினரின் முறைப்பு
என்னதான் பாசமாகவும், அன்பாகவும் பாமகவினரை அணுகினாலும், அவர்கள் முறைத்துக் கொண்டுதான் இருக்கின்றனராம். தர்மபுரியில் போட்டியிடும் அன்புமணி சேலத்திற்கு வந்து பாமகவினரை சந்தித்து பேசிய பின்னர் நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் – குரு
ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தலைவர் குரு ஆகியோர் வந்து வாக்கு கேட்காதவரை நிலைமை சீரடைய வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள் இன்னமும் பணியாற்ற மறுத்து வருவதும் சுதீசிற்கு பின்னடைவாகவே உள்ளது.
போட்டி வேட்பாளர்கள்
தேமுதிகவின் சுதீஷிற்கு போட்டியாக, அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம், திமுக வேட்பாளர் உமாராணி, ஆம் ஆத்மி வேட்பாளர் சதீஷ்குமார்,ஆகியோரும் சுறு சுறுப்பான களப்பணியில் இறங்கியுள்ளனர். இதுவும் சுதீஷ்சிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். ஆனாலும் நம்பிக்கையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் சுதீஷ்.
மோடி வருவாரா?
இது தவிர தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரும் இந்தத் தொகுதியில் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபடுவது கூடுதல் பலமாக இருக்கும் என்கின்றனர். நரேந்திர மோடியை சேலத்திற்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய வைக்கவும் தேமுதிகவினர் திட்டமிட்டுள்ளனராம். எப்படியோ சேலத்து மாங்கனியை கைப்பற்ற பலவித வியூகங்களை அமைத்துள்ளார் சுதீஷ் என்றே கூறுகின்றனர் தேமுதிகவினர்.