கருணாஸிற்கு உறுதுணையாக யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.. ஓ.பி.எஸ் உறுதி
கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். சென்னையில் தி நகரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொண்டார்.
விழாவில் மகாத்மா காந்தியின் அருமைகள், வரலாறு குறித்து பேசப்பட்டது. அதன்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் அமைச்சர்களும் இடம்பெற்று இருந்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
அதில், தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இப்போதுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக அரசு நீதிமன்றம் வழியாக போராடும்.
மதுரை எய்ம்ஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரையில் கண்டிப்பாக எய்ம்ஸ் அமையும். அந்த மாற்றமும் இதில் இல்லை.
தமிழகத்தில் நக்சலைட்
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை. நக்சலைட் இருப்பதாக பொன் ராதா கிருஷ்ணன் கூறியது தவறானது. அதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தும்.
கருணாஸ் குறித்து
கருணாஸ் பேசியது தவறானது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இதில் கண்டிப்புடன் செயல்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.