மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு.. மீண்டும் ஒரு சட்டைக் கிழிப்பு.. தலையெழுத்துடா தமிழா!
சென்னை: அதிமுக அம்மா கட்சி உடைந்து பிளந்திருப்பதால் மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையெல்லாம் பார்க்க வேண்டியது நமது தலையெழுத்தா என்று புலம்பல் மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவைக் கைப்பற்றினார். பொதுச் செயலாளரானார். தொடர்ந்து முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டார். அதற்கு கிட்டத்தட்ட ஓ.பி.எஸ். கடைசி வரை அமைதியாக ஒத்துழைப்பு கொடுக்கவே செய்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் சினிமாவில் வருவது போல திடீரென பொங்கி எழுந்தார். சசிகலாவின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டார். இடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பும் வரவே சிறைக்குப் போக வேண்டியதாயிற்று சசிகலாவுக்கு.
எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து எடப்பாடி முதல்வரானார். அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதையொட்டி நடந்த கூவத்தூர் கூத்துக்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டசபை கலாட்டாக்கள்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது நடந்த மோதல்களையும் மக்கள் மறக்கவில்லை. குண்டுக்கட்டாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தூக்கி வெளியேற்றப்பட்டது, தனபால் அவமானப்படுத்தப்பட்டது என விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறின.
மீண்டும் வருமா
தற்போது அதிமுக அம்மா கட்சி உடைந்துள்ளது. சில எம்.எல்.ஏக்கள், எடப்பாடி தரப்பின் அறிவிப்பை எதிர்த்துள்ளது. அதாவது தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி அரசு நீடிப்பது சிக்கலாகியுள்ளது. அது மெஜாரிட்டி பலத்துடன்தான் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆளுநர் என்ன செய்யப் போகிறார்
இன்று இரவு நடந்த அனைத்துமே ஒரு பெரும் குழப்பத்திற்கான ஆரம்பமே என்று தெரிகிறது. எனவே மீண்டும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவாரா எடப்பாடி அல்லது அவரது அரசை ஆளுநர் டிஸ்மிஸ் செய்வாரா என்பது உள்பட பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
இதையெல்லாம் பார்த்துத் தொலைய வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாகத் தெரிகிறது.