ஆட்சியை பிடிக்க ஆசைப்படும் "தமிழ்" நடிகர்களே... பிரகாஷ்ராஜைப் பார்த்து கத்துக்கங்களேன்!
எதிர்ப்பு அரசியல் என்றால் என்ன என்று பாஜகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜை பார்த்து தமிழகத்தில் அரசியலுக்கு வர நினைப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
சென்னை : பாஜக மீதும், அதன் தலைவர்கள் மீதும் சரியான புள்ளி விவரங்களோடு எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். பாஜகவை மிரட்டிக் கொண்டிருக்கிறார் தனது அதிரடி பேச்சுக்கள் மூலமாக.
ஆனால் தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஆட்சிக்கு மட்டுமே ஆசைப்படும் நடிகர்கள்தான் கண்ணில் தென்படுகிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் நடிகர்களுக்கு அவர் அளவிற்கு தில்லும் தைரியமும், தெளிவும் இல்லை என்பது பெரும் வெட்கக் கேடாக உள்ளது. பிரகாஷ் ராஜ் மத்திய அரசை சாடும் விஷயங்களில் நடுநிலையாளராக, மக்களின் கேள்விகளாக இருக்கின்றன. ரொம்ப அழகாக கேள்வி கேட்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட திரையுலகில் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பாஜக, அதன் தலைவர்கள் மீதும் அண்மைக்காலமாக எடுத்து வைக்கும் விமர்சனங்கள் பிரகாஷ்ராஜின் கருத்தாழத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பத்மாவத் படத்தை வெளியிடுவதில் பாஜக ஏற்படுத்திய சிக்கல் தொடங்கி தன்னை இந்துமத விரோதியாக பாஜக சித்தரித்தது வரை கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் சும்மா கேட்கிறேன் #just asking என்ற ஹேஷ்டேகின் கீழ் பாஜகவை வெளுத்து வாங்கி வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை எந்த பயமுமின்றி கேள்வி கேட்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். தம்முடைய இந்தமுயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
பாஜகவை சாடும் பிரகாஷ்ராஜ்
தன்னுடைய நெருங்கிய பத்திரிக்கையாளர் நண்பரான கவுரி லங்கேஷ் கொலையில் தொடங்கிய பிரகாஷ்ராஜின் பாஜக மீதான சாடல்கள் இந்துத்துவாவிற்கு எதிரான பிரச்சாரமாக திரித்து கூறப்பட்டது. தன்னை இந்து மதத்திற்கு எதிரானவர் என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஆனந்த் ஹெக்டே உள்ளிட்டோர் தான் இந்துக்களே அல்ல. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடிக்கு எதிரானவன் என்று மேடையில் உரக்கச் சொன்னவர் பிரகாஷ் ராஜ்.
பிரதமரின் வாக்குறுதியை ஒப்பீடு
பெங்களூரில் நேற்று நடந்த பாஜக பேரணியின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சை சுட்டிக்காட்டியும் ஒரு கருத்தை போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். அதில் "கடந்த 2014-ம் ஆண்டு பிராமிஸ் டூத் பேஸ்ட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பல் துலக்க மறந்துவிட்டது. இதனால், விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போதும் பிராமிஸ் டூத்பேஸ்டை நம்புகிறீர்களா? கர்நாடகாவில் நேற்று நடந்த பேரணியில் பிராமிஸ் டூத்பேஸ் விற்கப்பட்டதே அதை நம்புகிறீர்களா?, அல்லது அதை வாங்கப்போகிறீர்களா?" என்று டுவீட்டியுள்ளார்.
இதுவல்லவோ எதிர்ப்பு அரசியல்
பிரகாஷ் ராஜின் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் என்பது மிக துள்ளியமாகவும், சரியான விவரங்களோடும் இருப்பது அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. தமிழகத்திலும் நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பிரகாஷ் ராஜ் அளவிற்கு துணிச்சலான, தெளிவான அணுகுமுறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
நடக்குற விஷயமா?
மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்டு இதுவரை நடந்த விவரங்களை தெரிந்து கொண்டு மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்பது இப்போதைக்கு சாத்தியமான விஷயமா. இவங்க எப்போ மக்கள் பிரச்னையை புரிந்து கொண்டு அதற்கு ஆட்சியாளர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது.
கற்றுக்கொண்டால் நல்லா இருக்கும்
அரசியல் கட்சி தொடங்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும், கோட்டையில் கொடி நாட்ட வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருக்கிறதே தவிர, சமூக அக்கறை என்பது இவர்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்பது சற்று யோசித்து பார்க்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. தமிழக கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் காவிரி நீர் பிரச்னை, நீட் தேர்வு என்று ஏராளமான பிரச்னைகள் முடிவு எட்டப்படாமலே இருக்கிறது.
காவிரிக்காக குரல் கொடுக்காத நடிகர்கள்
ஆனால் மகதாயி பிரச்சினையில் பிரகாஷ் ராஜ் படு தெளிவாக பேசினார். இங்குள்ள ஆட்சிக்கு அலையும் நடிகர்களோ, காவிரிப் பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை. ஏன் மூச்சு கூட விடுவதில்லை. அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள் இவரக்ள். இந்தப் பிரச்னைகளில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்ற தெளிவு இல்லாமல் கட்சி தொடங்குறோம், முதல்வர் நாற்காலியில உட்காருரோம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் நடிகர்கள் பிரகாஷ்ராஜிடம் எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.