சொத்துக்குவிப்பு வழக்கிற்கு பின் நாடே எதிர்பார்க்கும் 2ஜி வழக்கு தீர்ப்பு! திமுகவுக்கு அக்னி பரிட்சை
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கிற்கு அடுத்தபடியாக தமிழகத்தையே உலுக்கப் போகும் 2 ஜி வழக்கு தீர்ப்பு திமுகவை நிலை குலையச் செய்யுமா, மதிப்பை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழக அரசியல் களத்தை மாற்றியமைக்கப்போகும் 2ஜி வழக்கு தீர்ப்பின் முடிவு திமுகவின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. . இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அரசியலில் என்ன மாற்றம் இருக்கக் கூடும் என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.
தமிழக அரசியல் களத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு சுனாமியாக 2ஜி வழக்கின் தீர்ப்பு வரவுள்ளது. சிபிஐ தொடுத்த இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வாக்கில் தீர்ப்பு அளிக்கவுள்ளதாக சொல்லியிருக்கிறது.
திமுகவுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தீர்ப்பு இருக்குமா? அல்லது விடுதலையை குறிப்பிட்டு தீர்ப்பு இருக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த விவாதத்தை தொடங்கியுள்ளனர்.
ஏல முறையில் முறைகேடு
2008 ஆம் ஆண்டில் ஆ.ராசா மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1 கோடியே 70 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதுதான் வழக்கு. 122 லைசென்ஸ்களை 85 நிறுவனங்களுக்கு ஏலம் விட்டதில்லை, பல நிறுவனங்கள் டெலிகாம் துறை அனுபவம் இல்லை என்பதும் குற்றச்சாட்டு. ஆனால், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பது ஆ.ராசாவின் தரப்பு விளக்கமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் உரிய அனுமதி பெற்று செயல்பட்டதாகவும் ஆ.ராசா தனது விளக்கமாக கொடுத்துள்ளார்.
சிபிஐ அறிக்கை என்ன சொல்கிறது?
இந்த வழக்கில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது இன்னொரு முக்கிய அம்சம் : சி.ஏ.ஜி (CAG) என்ற மத்திய தணிக்கை கணக்காயம் வெளிக்கொண்டுவந்த ஊழல். இந்த முறைகேட்டில் இழப்பு கணக்கீடு செய்யப்பட்டதில் தவறு இருக்கிறது என்றும் திமுகவினர் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். இந்த விவகாரத்தில் சிபிஐ என்ன அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
மீண்டும் சிறை செல்வார்களா?
ஆ.ராசா, கனிமொழி இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க வாய்ப்பு என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. இப்படி ஒரு தீர்ப்பு வந்தால், திமுக தனது பிரச்சார பலத்தை இழக்கும். அதிமுகவில் ஊழல், முறைகேடு என குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் திமுக, இந்த தீர்ப்புக்கு பிறகு வலுவினை இழக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
பாஜகவிற்கு பலம் கூடும்
இதனால், பாரதிய ஜனதாவுக்குஎன்ன லாபம்? முக்கியமான இரண்டு திராவிடக்கட்சிகள் புறக்கணிக்க வேண்டியவை, ஊழல் நிறைந்தவை என பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜகவின் வாதத்தை இந்தத் தீர்ப்பு வலுப்படுத்தும். மறுபக்கம் அதிமுக, திமுக அல்லாத வலுவான கூட்டணி அமைக்க பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆட்சியை பிடிக்கமுடியாவிட்டாலும், தேர்தல் களத்தில் வலுவான நிலையை பிடிக்கலாம் என்று ஆருடம் சொல்கிறார்கள் அரசியல்பார்வையாளர்கள்.
சாதகமாகுமா தீர்ப்பு
ஒருவேளை, தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தால், அதாவது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், திமுகவிற்கு அரசியல் களத்தில் நேர்மறையான வளர்ச்சிக்கு வித்திடும். அதிமுகவிற்கு மாற்றாக வளர்ந்து நிற்கும், தேர்தல் நடந்தால் வெற்றிக்கனியை பறிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். மேலும், பாரதிய ஜனதா கட்சியுடன் நேரடியாக மோதிவரும் திமுக, ஆளும் தேசிய கட்சியின் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்கும். திமுகவை மிரட்டிப் பார்க்க பாஜகவால் முடியாது. ஏன் காங்கிரசாலும் முடியாது.
தீர்மானிக்கப்போகும் ஆகஸ்ட் மாதம்
இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பின் சில பக்கங்களை எழுதத் தொடங்கியிருப்பார். தமிழக அரசியல் களம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு என்ன மாற்றங்களை சந்திக்கப்போகிறது. தீர்ப்பு மாற்றத்தை ஏற்படுத்துமா? திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என எழும் கேள்விகளுக்கு பதில் ஆகஸ்ட் மாதம் தெரியவரும்.