இது வேறயா.. தினகரன் ஜெயித்தால் ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்?
ஆர்.கே.நகர் தேர்தல் நடந்து அதில் தினகரன் வெற்றியும் பெற்றுவிட்டாலும் கூட உடனடியாக அவரின் பதவி பறிக்கப்படும் அளவில், ஃபெரா வழக்குகளின் போக்கு இருக்கும்.
சென்னை: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் மீண்டும் அத்தொகுதிக்கு ஒரு இடைத் தேர்தல் கேரண்டி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சசிகலாவுக்கு மாற்றாக அதிமுகவின் தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்த முயன்றது பாஜக. இதனால் காங்கிரஸ் பக்கமும் நட்பை வளர்க்க ஆரம்பித்தது சசிகலா தரப்பு.
சசிகலா கணவர் நடராஜன், ஆரியம், திராவிடம் என்றெல்லாம் சொல்லி திரி கொளுத்தினார். இந்த நடவடிக்கைகள் எல்லாமே பாஜக மேலிடத்திற்கு கடும் கோபத்தை வரவழைத்தன.
பாஜக கோபம்
இந்த நிலையில் சசிகலா சிறை சென்றுவிட்டதால் இனி வரும் தலைமையை கட்டுக்குள் வைக்கலாம் என நினைத்தது பாஜக. சசிகலாவோ தனது அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு சென்றதை பாஜக ரசிக்கவில்லை. தினகரன், பாஜக பக்கம் தூதுவிட்டுக் கொண்டே பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றிக்காக காங்கிரசுக்கு வாழ்த்து கூறியதை பாஜக உன்னிப்பாக கவனித்தது.
ஃபெரா வழக்கு
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடுவார் என்பதை யோசிக்காத பாஜக அந்த முடிவை தொடர்ந்து மேலும் கோபத்தில் உள்ளதாம். இதனால் ஃபெரா வழக்கை துசி தட்டி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மூலம் ஆக்ரோஷமாக வாதம் எடுத்து வைக்க தொடங்கியுள்ளது மத்திய அரசு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால்தான் இப்போது தினமும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது கோர்ட்.
அபராதம்
ஃபெரா வழக்கில், 1998ம் ஆண்டு தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. அதை எதிர்த்து அயல்நாட்டு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தார் அவர். இதை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம், அபராதத் தொகையை 28 கோடி ரூபாயாகக் குறைத்து 2000ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி உத்தரவிட்டது. அதையும் தினகரன் செலுத்தவில்லை.
மேல்முறையீடு
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் மேல்முறையீடு செய்து, என் மீது எந்தத் தவறும் இல்லை. அதனால், எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 28 கோடி ரூபாய் அபராதத்தை தினகரன் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது.
திவாலான தினகரன்
அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடித்துக்கொண்டிருப்பதால், தினகரனுக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் தினகரன் அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார் என்பதால், அவரை திவாலானவர் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதுபோல, ஜெ.ஜெ டி.வி வழக்கும் தினகரனுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது.
வழக்கின் போக்கு
ஃபெரா வழக்கிலிருந்து அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது என்கிறார்கள், அதுகுறித்த வழக்குகளை நன்கு அறிந்தவர்கள். எனவே ஆர்.கே.நகர் தேர்தல் நடந்து அதில் தினகரன் வெற்றியும் பெற்றுவிட்டாலும் கூட உடனடியாக அவரின் பதவி பறிக்கப்படும் அளவில், ஃபெரா வழக்குகளின் போக்கு இருக்கும். அதுவும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தேர்தல் ஒத்தி வைப்பு
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததாகப் புகார் எழுந்ததால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல ஆர்.கே. நகர் தேர்தலும் தள்ளிவைக்கப்படலாம் என்கிறார்கள். அதற்கேற்ப பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து கூறியபடியே உள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். எப்படியாவது சசிகலா கோஷ்டியை சேர்ந்த டிடிவி தினகரன் மட்டும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம் பாஜக தலைமை.