அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகுமா?
Recommended Video
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நியமனமும், தினகரன் நியமனமும் செல்லாது என்று இன்றைய அதிமுக பொதுக்குழு தீர்மானம் சொல்கிறது.
இதில் யார் சொல்வது சரி, யார் சொல்வது பொய் என்பது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர்களிடையே இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் என பொதுக்குழுவை கூட்டி அறிவித்தபோது அதில் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர். தேர்தல் ஆணையத்திலும் பிரமாண பத்திரங்களை அப்படித்தான் தாக்கல் செய்தனர்.
சசிகலா நியமனம் செல்லாது
இந்த நிலையில், பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவி பறிபோனதும், தர்ம யுத்தம் நடத்துவதாக கூறிக்கொண்டு கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது முதல் சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானது செல்லாது என கூறி வருகிறார். தேர்தல் ஆணையத்திலும் இந்த பஞ்சாயத்து கொண்டுப்போகப்பட்டுள்ளது.
முடிவு எடுக்கவில்லை
சமீபத்தில் ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் பதில் வழங்கியிருந்தது. எனவே தொண்டர்கள் மத்தியில் குழப்பம் மேலும் அதிகரித்தது.
சசிகலா பதவி நீக்கம்
இப்போது எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை என கூறியுள்ளனர். தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் இப்போது பால் இந்த பக்கம். இந்த தீர்மானம் செல்லாது என தினகரன் தெரிவித்துள்ளார்.
இரண்டுக்குமே மதிப்பு உள்ளதா?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கிய பொதுக்குழுதீர்மானமாகட்டும், இன்றைய தினம், அவரை பதவியில் இருந்து நீக்கச் சொல்லி பிறப்பிக்கப்பட்ட தீர்மானமாகட்டும், இரண்டின் தலைமீதும் கத்தி தொங்கிக்கொண்டுள்ளது.
வழக்குகள் நிலுவை
சசிகலா நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும், தலைமை தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையிலுள்ளன. அதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்றைய பொதுக்குழுவில் எடுத்த முடிவு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மீதும் தேர்தல் ஆணையம் உடனடி முடிவு எடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பழைய பஞ்சாயத்தே இன்னும் முடிவடையாத நிலையில், அதை முடித்துவிட்டுதான், இந்த தீர்மானத்தை ஏற்பதா, நிராகரிப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு தேர்தல் ஆணையம் வர முடியும்.
இறுதி முடிவு
சென்னை ஹைகோர்ட் கூட, நேற்று வழங்கிய உத்தரவில், பொதுக்குழுவை கூட்டிக்கொள்ளலாம், ஆனால் அதன் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என தெளிவாக கூறியுள்ளது. எனவே அதிகாரம் இல்லாத பதவிகளில்தான் பொதுக்குழு சுட்டிக்காட்டியவர்கள் அமர முடியும். நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் தீர்ப்பு கூறும்போதுதான் இந்த தீர்மானங்களுக்கு உயிர் வரும். அது எந்த தீர்மானம் என்பதில்தான் உள்ளது அதிமுகவின் எதிர்காலம்.