"அம்மா"வின் அழைப்புக்காக காத்திருக்கும் தமாகா!
சென்னை: தேர்தல் நேரத்தில் துண்டு, துக்கடா கட்சிகளையும் பற்றி எல்லாம் தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்க, ஒரு பெட்டிச் செய்தி கூட வரவில்லை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பற்றி.
அப்பா மூப்பனாருக்கு டெல்லி வரை தொடர்புகள் நன்றாக இருந்தது. ஆனால் மகன் ஜி.கே.வாசனுக்கோ தமிழக அளவில் கூட இன்னும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய கோஷ்டியின் தலைவர் என்ற வகையில் அவர் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். ஆனால் வெளியில் வந்து தமாகாவை மீண்டும் ஆரம்பித்த பின்னர் அவர் மீதான ஈர்ப்பு குறைந்து இப்போது மங்கிப் போய் விட்டது.
யாருடன் கூட்டணி
யாருடன் கூட்டணி என்று எப்போது கேட்டாலும், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான சட்டசபைத் தேர்தல் வருகிற மே மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.. என்று ஆரம்பித்து நீளமாக பேசிக் கொண்டே போகிறாரே தவிர யாருடன் கூட்டணி என்பதை மட்டும் ஜி.கே.வாசன் நேரடியாக சொல்லவே மாட்டேன் என்கிறார்.
அதிமுகவுடன் மறைமுக பேச்சு
இதுவரை தமாகாவை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு அழைத்ததா தெரியவில்லை. ஆனால், தாமகவுடன் அதிமுக மறைமுக பேச்சு நடத்துவதாக கூறுகின்றனர்.ஆனால் சொற்ப அளவிலேயே சீட் தர அதிமுக முன் வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
சின்னம் பிரச்சினையா?
மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ள கட்சிகளை மட்டுமே முதல்வர் ஜெயலலிதா கூப்பிட்டுப் பேசியுள்ளாராம். தமாகா தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதால் இதுவரை நேரில் சந்திக்க அழைப்பு வரவில்லை என்கிறார்கள்.
அடுத்த அழைப்பு வாசனுக்குத்தான்
அதே நேரத்தில் ஜெயலலிதா அடுத்து ஜி.கே.வாசனைத்தான் சந்திக்கப் போவதாக ஒரு செய்தி உலா வருகிறது. இதுதொடர்பாக வாசன் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், எப்போது அழைத்தாலும் வந்து சந்திக்கத் தயாராக இருக்குமாறு அதிமுக தரப்பு அவரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.