ஓவராயில் செய்து ஜம்மென்று காத்திருக்கும் "சைக்கிள்".. போகும் வழி எதுவோ...?!
சென்னை: தமிழக அரசில் கட்சிகளிலேயே பெரிய அளவில் நெருக்கடி இல்லாத, டென்ஷன் இல்லாத, கவலையே இல்லாத ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸாகத்தான் இருக்க முடியும். இருப்பினும் தமாகவுக்கும் நல்ல கிராக்கி இருக்கத்தான் செய்கிறது.
மீண்டும் புதிதாக பிறந்த கட்சி என்பதால் மட்டுமல்ல, தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாத கட்சியும் கூட தமாகா.
இருந்தாலும் இக்கட்சிக்கும் கிராக்கி உள்ளது. தங்களுடன் வந்து சேருமாறு திமுக பக்கமிருந்து அழைப்பு வந்துள்ளதாம்.
மூப்பனாரின் கோபத்தில்
மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவரையும் மீறி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க எடுத்த முடிவால் கோபமடைந்த மூப்பனார் கட்சியை உடைத்து வெளியேறினார். கிட்டத்தட்ட மொத்த காங்கிரஸும் அவருடன் சேர்ந்து வந்தது. அப்போது பிறந்தது தமாகா.
மறைவுக்குப் பின் இணைப்பு
அவரது மறைவுக்குப் பின்னர் மகன் ஜி.கே.வாசன் கைக்கு வந்தது தமாகா. அவரும் சிறிது காலம் தனிக் கட்சியாக நடத்தி வந்தார். பின்னர் காங்கிரஸுடன் இணைந்தார்.
மீண்டும் பிரிவினை
இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து வெளியேறியது ஜி.கே.வாசனின் பழைய தமாகா. மீண்டும் புதிதாய்ப் பிறந்தது தமிழ் மாநில காங்கிரஸ். இதோ சட்டசபைத் தேர்தலையும் சந்திக்கப் போகிறது.
யாருடன் கூட்டணி?
நிச்சயம் தனித்து நின்று போட்டியிடும் அளவுக்கு தமாகாவிடம் பலம் இல்லை. அதேசமயம், தனது வாக்கு வங்கி என்ன என்பதையும் நிரூபிக்காத கட்சியாகவும் உள்ளது.
திமுகவிடமிருந்து அழைப்பு
இந்த நிலையில்தான் திமுகவிடமிருந்து தமாகாவுக்கு அழைப்பு வந்துள்ளதாம். ஆனால் அங்கு ஏற்கனவே போய் காங்கிரஸ் கட்சி துண்டு போட்டு வைத்து விட்டதால் தமாகாவினருக்கு அங்கு போகும் எண்ணம் இல்லையாம்.
அதிமுகவுக்கு ஆதரவு
அதேசமயம், ஜி.கே.வாசனைச் சுற்றியுள்ள பலரும் குறிப்பாக எஸ்.ஆர். பி போன்றோர் அதிமுக கூட்டணிக்கு முயற்சிக்கலாம் என்று சொல்லி வருகிறார்களாம். இதுகுறித்து வாசன் இன்னும் முடிவெடுத்ததாக தெரியவில்லை.
வேற வழியில்லாட்டி ம.ந.கூ
ஒருவேளை திமுகவும் இல்லை, அதிமுகவும் வேண்டாம் என்ற முடிவெடுத்தால் வாசன் எடுக்கப் போகும் முடிவு அனேகமாக மக்கள் நலக் கூட்டணியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
லோக்சபாவில் பார்க்கலாம்
இப்போதைக்கு ஏதாவது ஒரு அணியில் இடம் பெற்று தனது பலத்தை பெருக்கி அதை நிரூபித்தால், அடுத்து வரும் லோக்சபா தேர்தலுக்கு தனக்கும், கட்சிக்கும் உதவியாக இருக்கும் என்று வாசன் கருதுவதாக தெரிகிறது.
பலமாவது முக்கியம்
எனவே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பதை விட கட்சியை பலமாக்குவதுதான் இப்போதைக்கு தமாகாவின் முக்கிய இலக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது.