கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு... எப்படி இருக்கும் பட்ஜெட் 2018?
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்யும் முழு நிதிநிலை அறிக்கை மக்களின் சுமை நீக்கி சுகம் தரும் வகையில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் மக்கள்.
சென்னை : ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்யும் முழு நிதிநிலை அறிக்கை மக்களின் சுமை நீக்கி சுகம் தரும் வகையில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் மக்கள்.
இந்த ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையானது நாளை மறுதினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி எனப்படும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்யும் முழு நிதிநிலை அறிக்கை என்பதால் பட்ஜெட்டில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டியால் பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களைவிட வாங்கும் திறன் அதிகம் உள்ள மாநிலங்களுக்கே அதிக வருவாய் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வருவாயானது கிடைக்கிறது. இதன்படி ஜிஎஸ்டியால் வருவாய் சம்பாதிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் மஹாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில் தமிழகமும் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனால் இந்த பலன்கள் பட்ஜெட்டில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிகரித்து வரும் நிகர கடன் சுமை
கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. 2016ம் ஆண்டை விட 2017ம் ஆண்டில் நிகர கடன் சுமை 3 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அரசே கூறி இருந்தது. இதனால் இந்த ஆண்டும் நிகர கடன் சுமையானது ரூ. 4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியில்லை
கடன் சுமையில் இருந்து மீண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய இக்கட்டான சூழலில் தமிழக அரசு உள்ளது. போக்குவரத்து நிலைமையை சீர் செய்ய மக்கள் மீது பேருந்து கட்டண திணிப்பு செய்த போதும் துறை வாரியாக பல சவால்களை அரசு எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை சரியான நேரத்தில் தமிழக அரசு பெறாததே என்று தணிக்கை ஆய்வு கூறுகிறது.
மற்ற துறைகளிலும் வருமானம் பெருக்க வேண்டும்
டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு இரண்டை மட்டுமே அரசு வருவாய் ஈட்டும் துறைகளாக வைத்துள்ள நிலை மாற வேண்டும். எல்லாத் துறைகளிலும் இருக்கும் செல்வங்களை பயன்படுத்தி லாபம் பார்க்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. டாஸ்மாக் கடைகளும் தேர்தல்அறிவிப்பு, நீதிமன்ற நெருக்குதல்களால் மூடப்பட்டு வருகிறது, பத்திரப்பதிவுத் துறையில் வருவாய் இலக்கு குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கல் என்று இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று தான் அரசு கஜானா இருக்கிறது.
உணவு தானிய உற்பத்தி எப்படி?
தண்ணீர் பிரச்னையால் சரியான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் விவசாயிகள். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை தமிழகம் எட்டியதா என்பதற்கான பதில் இந்த பட்ஜெட்டில் தான் தெரியும். நெருக்கடியில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளது.
பட்ஜெட் சுகம் தருமா?
கடனை குறைத்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இந்த பட்ஜெட் இருக்குமா. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுமா என்ற கேள்விகளை பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன.