குறைந்த சம்பளம்: விழி பிதுங்கும் மஸ்தூர் பணியாளர்கள்
நெல்லை: டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் டெங்கு ஒழிப்பு பணி பாதிக்கப்பட தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலை தூக்கியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முடக்கி விடப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த தற்காலிக மஸ்தூர் பணியாளர்கள் ஜனவரி முதல் வாரம் முதல் மீண்டும் மூன்று மாதங்களுக்கு பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வட்டாரத்திற்கு தலா 3 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது, வீட்டு தொட்டிகளில் டெமிபால் மருந்து தெளிப்பது, கொசு மருந்து புகை அடிப்பது, கொசு ஒழிப்பு குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுககப்பட்டது.
இப்படி அதிகம் பேர் பணி புரியும் இடங்களில் அவர்களை சுகாதார துறையினர் கண்காணிப்பது சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகி்றது. மேலும் மஸ்தூர் பணியாளர்களுக்கு தினமும் ரூ.160 மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சில பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லாததால் அங்கு செல்ல கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த காரணங்களால் மஸ்தூர் பணியாளர்கள் பலர் பணிக்கு செல்லாமல் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் மேலும் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஏற்கனவே டெல்லியில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பதாக பலர் புலம்ப தொடங்கியுள்ளனர்.