திணறும் அதிமுக.. பிரச்சனையில் திமுக.. பலன் பெறுவாரா டிடிவி தினகரன்?
திமுக கட்சியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனையும், அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சனையும் டிடிவி தினகரனுக்கு பெரிய பலனை அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை: திமுக கட்சியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனையும், அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சனையும் டிடிவி தினகரனுக்கு பெரிய பலனை அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
முக்கியமாக தமிழ்நாட்டில் நடக்க உள்ள இடைத்தேர்தல்களில் அவர் இதன் மூலம் பலன்பெற வாய்ப்புள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று அளித்த பேட்டி அளித்துள்ளார்.
இது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் அடுத்து என்ன மாதிரியான மாற்றத்தை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே பிரச்சனை
அதிமுக கட்சியில் கடந்த இரண்டு வருடமாகவே பிரச்சனை உள்ளது. ஜெயலலிதா இறந்த பின் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், திவாகரன், தீபா, மாதவன், என்று பலர் பிரிந்து இருக்கிறார்கள். இதனால் அதிமுக கட்சியே மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கிறது. அடுத்த பெரிய தேர்தலை சந்திக்க அந்த கட்சிக்கு வலு இருக்குமா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
திமுக பிரச்சனை
அந்த அளவிற்கு மோசமான நிலை இல்லை என்றாலும், கொஞ்சம் அதை போன்ற நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இறந்துவிட்டார், செயல்தலைவர் ஸ்டாலின் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் திமுகவை மேலும் வலுவிழக்க வைக்கும் வகையில் அழகிரி வேறு தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளார். இதனால், திமுக மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு பலன்
இதனால் தற்போது டிடிவி தினகரன் பெரிய பலனை சந்திக்க உள்ளார். ஆம் திமுக, அதிமுக என்ற இரண்டு முக்கிய கட்சிகள் பின்னடைவை சந்தித்து இருக்கும் போது, அதே சாயலில் அரசியல் செய்யும் டிடிவி தினகரன் இதன் மூலம் பலனடைய வாய்ப்புள்ளது. அதேபோல் அதிமுக தொண்டர்கள் பலரின் ஆதரவும் அவருக்கு இருப்பதால், எளிதாக இவர்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாக தினகரன் மாற முடியும்.
தினகரனுக்கு வெற்றிப்பாதை
இதற்கான அடித்தளத்தை அவர் ஆர்.கே நகரிலேயே போட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஆளும் கட்சியையே அவர் அந்த தேர்தலில் தோல்வி அடைய செய்தார். அதே போல் திமுகவையும் மோசமாக தோல்வி அடைய செய்தார். இதனால் இனி வரும் இரண்டு இடைத்தேர்தலிலும் அவருக்கு இந்த இரண்டு கட்சிகளின் பிளவு பெரிய பலனை அளிக்க வாய்ப்புள்ளது.