குக்கர் விசில் அடிக்குமா இல்லை வெடித்துச் சிதறுமா.. பரபரப்பு எதிர்பார்ப்பில் திருவாரூர்!
Recommended Video
சென்னை: இப்போ விஷயம் என்னன்னா டிடிவி தினகரன் கிட்டத்தட்ட திருவாரூர் தொகுதியில் பாதியை பிடித்துவிட்டாராம்!
கருணாநிதி காலமானதால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க, ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. திமுக பொறுத்தவரை தலைவர் பதவியேற்பு, கருணாநிதிக்கான புகழஞ்சலி, வீரவணக்க, நினைவஞ்சலி கூட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விலகி சென்ற நிர்வாகிகளின் வருகைகளும் நடைபெற்றது.
இது போக அழகிரியின் அதிரடியும், சவால் பேரணியும் நடந்து முடிந்தது. இப்படி திமுகவே கடந்த ஒரு மாதமாகவே படுபிஸியாகிவிட்டது. இதனால் திருவாரூர் தொகுதி பற்றியே முழுமையாகவே நினைக்கவில்லை. இன்னும்சொல்லப்போனால் தொகுதியில் இறங்கி வேலைபார்க்கவில்லை என கூறப்படுகிறது.
வேலை பார்க்கவில்லையே?
சொந்தத் தொகுதிதான்... கருணாநிதியின் ஆஸ்தான தொகுதிதான்... கருணாநிதி மறைவால் அனுதாபத்தின் மூலம் எளிதாவெற்றி முடிகிற தொகுதிதான்... புதிய திமுக தலைவரின் மவுசு கூடியதால் பெரும்பாலானோர் வாக்களிக்ககூடிய தொகுதிதான்... என்றாலும் இறங்கி வேலை பார்த்தால்தானே எதுவும் சாத்தியமாகும்? தானாக கையில் வந்து எதுவும் உட்கார்ந்து கொள்ளாதே?
விரிசல் இருக்கா?
இதேபோல்தான் அதிமுகவிலும்!! மதுசூதனன் பத்திரிகைகளில் பேசப்படுகிறார் என்றாரே கிலிதான்! கட்சிக்குள் என்னமோ உட்கட்சி பூசல் வேலை ஆரம்பிச்சாச்சு என்றுதான் அர்த்தம். ஒருவாரத்துக்கு மேல் ஆகியும் உண்மையிலேயே அங்க என்னதான் நடக்குதுன்னு தெரியல. ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒத்துமையாத்தான் இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனாலும் என்னமோ ஒரு விரிசல் இருக்கிற மாதிரியே ஒரு தோற்றம் உள்ளது.
சமாளிக்க முடியல
இதுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் விஸ்வரூப குட்கா விவகாரம்.. கையும் களவுமாக அளவுக்கு அதிகமாகவே மாட்டியும், எந்த நடவடிக்கையும் எடுப்பதாக அறிகுறியே காணோம். ஆதாரங்களையும், ஆவணங்களையும் தேவைக்கு அதிகமாகவே சிபிஐ வசம் இருந்தும், அமைச்சரின் தந்தையின் வாக்குமூலம் இருந்தும், "மடியில் கனம் இல்லை" என்று அறிக்கை கொடுக்கிறார் விஜயபாஸ்கர். இப்படி அதிமுகவுக்குள் விஜயபாஸ்கர், டிஜிபி என கதிகலங்கி உள்ளது. இதனை சமாளிக்கவே அதிமுகவுக்கு சரியாக இருக்கிறது.
களமிறங்கிய தினகரன்
இப்படி திமுக, அதிமுக கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கம் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தைதான் டிடிவி தினகரன் மிக சரியாக பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஊர் ஊராக இரு இடைத்தேர்தல்களிலும் அமமுகதான் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் கூறி வருகிறார். இதில் திருவாரூரில் களப்பணி ஜரூராக நடந்து வருகிறதாம்.
திமுகவா, அதிமுகவா?
இதேபோல, போன வாரம் தஞ்சாவூர் வந்த தினகரன், "திருப்பரங்குன்றம், எனக்கு நன்கு பழக்கப்பட்ட தொகுதிதான். அதனால நமக்கு வெற்றி வாய்ப்பு ரொம்ப பிரகாசமாக இருக்கு" என்று சொல்லி விட்டு போனார். ஆனால் கவனம் முழுவதும் திருவாரூரில்தான்!! தேர்தல் பணிகளை மிக தீவிரமாக தொடங்க காரணம், திமுகவும், அதிமுகவும் தினகரனுக்கு ரெண்டாம்பட்சம்தான்.
சுவர் இருக்கிறதா?
ஆனால் குறி திவாகரனின் அரசியல் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒருமாதமும் அங்கே அமமுக தொண்டர்கள் சும்மா இல்லை... இதற்காக உறுப்பினர்களை சேர்க்க தொடங்கினர்... பிறகு திருவாரூரின் பிரதான சுவரைபிடித்து குக்கர் சின்னத்தை வரைந்து விளம்பரங்களை ஆரம்பித்துவிட்டார்கள்... இந்த சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான சுவர்களில் குக்கர்தான் இருக்கிறதாம். மற்ற கட்சிக்காரர்கள் வந்தால் விளம்பரங்கள் செய்ய சுவர்கள் இருக்குதா இல்லையா என்று தெரியவில்லை.
நாஞ்சில் வரப்போகிறார்?
இதையெல்லாம் பார்த்த திவாகரனும், தினகரனை இந்த இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே லட்சியம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். திவாகரனின் பிரச்சாரத்திற்கு நாஞ்சில் சம்பத்தை கூட்டி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்களான தினகரனும், திவாகரனும் களத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். இதுக்கு நடுவில் பாஸ் என்கிற பாஸ்கரன் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று வந்தார், அது என்ன ஆனதுன்னே தெரியல.
குக்கர் என்ன ஆகும்?
எனவே பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொஞ்சம் திருவாரூர் பக்கமும் போய் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, டிடிவி தினகரன் சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை இறங்கி வேலைபார்த்து வருகிறார் என்பதும் அவருக்கு திமுகவுக்கு இணையாகவே வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பார்ப்போம் ஆர்.கே.நகர் போல திருவாரூரிலும் குக்கர் விசிலடிக்கிறதா? அல்லது வெடித்து சிதறுகிறதா? என்று!!