அண்ணன் மாதிரியே தலைவர் ஆவாரா வசந்தகுமார்?.. அப்பா மாதிரியே கட்சியை உடைப்பாரா வாசன்??
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் பதவிக்காலம் எண்ணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் காலிப் பெருங்காய டப்பா ஆகி விட்டதால் தலைவர் பதவிக்கு புதியவரைப் போட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனராம்.
அந்த வரிசையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு கெளரவமான முறையில் 2வது இடம் பிடித்தவரான எச். வசந்தகுமார் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.
டப்பா டான்ஸ் ஆடியபோது ஸ்திரமாக இருந்தவர்
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4வது இடம், 5வது இடத்தைப் பிடித்து கேவலப்பட்டபோது வசந்தகுமார் மட்டும் கெளரவமாக கன்னியாகுமரி தொகுதியில் 2வது இடத்தைப் பிடித்திருந்தார்.
முன்னாள் தலைவர் குமரியாரின் தம்பி
வசந்தகுமார் வசந்த் அன் கோவின் நிறுவனர். அது மட்டுமல்லாமல் தமிழக வர்த்தக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.
கடும் எதிர்ப்புகளைத் தாண்டி சீட் பிடித்தவர்
கன்னியாகுமரி தொகுதியில் சீட் பெற விஜயதாரணி முதல் பலரும் முட்டி மோதியபோது அலேக்காக சீட்டைப் பெற்று அனைவரையும் திகைக்க வைத்தவர் வசந்தகுமார்.
சோனியாவின் கருணையைப் பெற்றவர்
தமிழகத்தில் சோனியா காந்தி ஒரே ஒரு தொகுதியில்தான் பிரசாரம் செய்தார். அது கன்னியாகுமரி மட்டுமே. இதனால் சோனியா காந்திக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறி வருகிறாராம் வசந்தகுமார்.
தலைவர் ஆவாரா
இந்த நிலையில் தனக்கு காங்கிரஸ் மேலிடம் கட்சித் தலைவர் பதவியைத் தரும் என்ற நம்பிக்கையில் வசந்தகுமார் உள்ளார்.
குமரி அனந்தன் காலத்தில்தான் உடைந்தது காங்கிரஸ்
அதேசமயம், இவரது அண்ணன் குமரி அனந்தன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது.
மகனும் உடைப்பாரா...
இந்த நிலையில் வசந்தகுமார் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால், நிச்சயம் ஜி.கே.வாசன் அதை ஏற்க மாட்டார் என்று சொல்கிறார்கள். எனவே அப்பாவைப் போல வாசனும், கட்சியிலிருந்து வெளியேறி தனிக் கட்சி காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.