நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தீர்மானம்: வேலூர் மேயர், கமிஷனருக்கு சிக்கல்?
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடை அடைப்பு, பஸ் நிறுத்தம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது. பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மவுன விரதம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் கடந்த 30-ஆம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நீதிபதி குன்ஹாவை கண்டித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அவசரமாக தீர்மானம் திருத்தப்பட்டது.
தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜானகிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதனால் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பதவிக்கு ஏதாவது ஆபத்து வருமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் நீதிபதியை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆணையாளர் ஜானகி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். வீடியோ ஆதாரங்கள் உள்ளதால் தீர்மானம் குறித்து மறைக்க முடியாது. அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் மேயர் கார்த்தியாயினிக்கு அபராதம், பதவி விலகல், ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.