மக்கள் நலக் கூட்டணிக்கு.... ஜி.கே.வாசன் வருவாரு.. ஆனால் விஜயகாந்த் வருவாரா..?
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த்தை இழுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்களாம். ஜி.கே.வாசனையும் அழைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்களில் வாசன் வர வாய்ப்புண்டு. ஆனால் விஜயகாந்த் போக்கு அவருக்கு மட்டுமே புரியும்படி உள்ளதால் அவர் வருவாரா, மாட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் எதிர்காலம்.. நிச்சயம் மக்கள் கையில் இருப்பது போலத் தெரியவில்லை.. மாறாக திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி மற்றும் அதிமுக ஆகியவற்றின் கையில்தான் இருப்பது போலத்தான் தெரிகிறது.
காரணம், மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தங்களின் வாக்கு வங்கியை மட்டுமே மனதில் வைத்து இவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு கணக்கு போடடு அவர்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜவ்வு மிட்டாய் விஜயகாந்த்
ஒரு காலத்தில் உச்சாணியில் இருந்த பாமக கூட இப்படி இழுத்தடித்ததில்லை. தங்களிடம் யார் பேசினாலும் அவர்கள் பேசுவார்கள். தங்களுக்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்பார்கள். எல்லாமே சட்டுப் புட்டென்று நடக்கும். ஆனால் விஜயகாந்த்தோ ஜவ்வு மிட்டாய் போல இழுத்தடித்து வருகிறார்.
மக்களுக்கு நஷ்டமில்லை.. ஆனால்!
இவர் இப்படி இழுத்தடித்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை. ஆனால் சில கட்சிகளுக்குத்தான் பெரும் அவஸ்தையாக இருந்து வருகிறது.
திமுக - பாஜக
விஜயகாந்த்தை இழுப்பதில் திமுகவும், பாஜகவும்தான் முன்னணியில் உள்ளன. காரணம் இவர்கள் இருவரிடம் மட்டும்தான் விஜயகாந்த் தரப்பு மாறி மாறி மாறி மாறி மாறி பேசி வருகிறது. அவர்களும் மான, அவமானம் பார்க்காமல் விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணி
மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணியும் தற்போது களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். ஆரம்பத்தில் இந்தக் கூட்டணிதான் தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் பார்வை பாஜக மற்றும் திமுக பக்கம் திரும்பியதால் இவர்கள் திரும்பி விட்டனர்.
நம்பிக்கை
இந்த நிலையில் பாவம் விஜயகாந்த்தே குழம்பிட்டார் என்ற ரேஞ்சுக்கு நிலைமை போய் விட்டதால் மறுபடியும் விஜயகாந்த்தை இழுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாம் மக்கள் நலக் கூட்டணி.
வருவாரா.. அவர் வருவாரா....!
விஜயகாந்த்தை கூடடணிக்குள் இழுக்க வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய நால்வருமே ஆர்வம் கொண்டுள்ளனர். ஏற்கனவே சிலமுறை விஜயகாந்த்துடன் பேசியுள்ளனர். அப்போது அவர்களிடம் நான் கூட்டணிக்கு வரமாட்டேன், விருப்பம் இல்லை என்று நெகட்டிவாக விஜயகாந்த் ஒருபோதும் கூறவில்லையாம்.
கடைசி நேரத்தில்
கடைசி நேரத்தில் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணையக் கூடும் என்று தற்போது தகவல்கள் கூறுகின்றன. அந்த நம்பிக்கையில் தற்போது மக்கள் நலக் கூட்டணியினரும் உள்ளனராம்.
இங்கேயும் தொழிலதிபர்!
திமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் சில பல தொழிலதிபர்கள்தான் விஜயகாந்த் தரப்புடன் பேரம் உள்ளிட்டவை குறித்துப் பேசி வருவதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளன. அதேபோல மக்கள் நலக் கூட்டணிக்காகவும் ஒரு தொழிலதிபர் களத்தில் இறங்கியுள்ளாராம். அவர் சிமென்ட் பிசினஸில் இருப்பவராம். அதேபோல கல்லூரி பிரபலம் ஒருவரும் களம் குதித்துள்ளாராம்.
வாசன் ரெடி!
மறுபக்கம் தமிழ் மாநில காங்கிரஸையும் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜி.கே.வாசனுக்கும் மக்கள் நலக் கூட்டணியில் சங்கமிக்க ஓகேதானாம். இருப்பினும் அதிமுக பக்கமாகவும் ஒரு பார்வையை வைத்திருப்பதாக சொல்கிறார்கள். எனவே அவரது முடிவும் சற்றுத் தள்ளிப் போகக் கூடுமாம்.
எப்படியோ மக்களுக்கு (உண்மையிலேயே) நலம் தரும் கூட்டணி அமைந்தால் சரித்தான்!