கை கொடுத்த காற்று – 3000 மெகாவாட்டை தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக காற்று நன்றாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான 12995 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு கை கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் மெகா வாட்டுக்கு குறையாமல் மின்சாரம் கிடைத்து வருகிறது.
நேற்று மாலை வரை சுமார் 2638 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது அதிகாலை 2 மணிக்கு மின் உற்பத்தி 1629 மெகா வாட்டாக இருந்த நிலையில் காலை 7 மணிக்கு 2973 மெகா வாட்டாக உயர்ந்தது. கடந்த இருபது நாட்களில் காற்றாலை மூலம் அதிகபட்சமாக நேற்று மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.
இந்த நிலையில் ஒரு சில இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு மின்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் சில தொழில் நிறுவனங்கள் மூன்று ஷிப்டுகளில் உற்பத்தியை தொடர முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
குற்றாலத்தை பொறுத்தவரை வரை வானம் மாலை நேரங்களில் மேக மூட்டமாக இருந்தாலும் மழை வருவதற்கான வழியை காணவில்லை. இதனால் சீசன் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. சீசனை எதிர்பார்த்து குற்றாலத்தில் கடைகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.