தமிழகத்தில் கை கொடுக்கும் காற்றாலை- வெளி மாநில மின்சாரம் அளவு குறைப்பு
நெல்லை: தமிழகத்தில் காற்றாலைகள் சுழலத் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து வாஙகும் மின்சாரத்தின் அளவை மின் வாரியம் குறைத்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் காற்று வீசும் காலத்தில் கிடைக்கும் மின்சாரம் மட்டுமே மின் வெட்டை சமாளிக்க கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவே காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும்போது தேவையான மின்பாதை இல்லாததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் கூடுதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கத்தரி வெயில் கொளுத்தும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் காற்று வீச தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக மிதமான காற்று வீசி வருவதால் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதி வாரத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் அறவே உற்பத்தி ஆகவில்லை. இது தற்போது 1500 மெகா வாட்டை தாண்டியுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு உள்ள நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 1995 மெகா வாட்டை எட்டியது. இதனால் பல மாவட்டங்களில் மின் வெட்டு தற்காலிகமாக விளக்கி கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை மின் தேவை 12 ஆயிரத்து 995 மெகா வாட்டாக இருந்தது. 11 ஆயிரத்து 634 மெகா வாட் மின்சாரம் வினியோகித்து நிலைமை சரி செய்யப்பட்டது.
சனிக்கிழமை, மாலையிலும் நல்ல காற்று வீசியது. இதனால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வெளியிடங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முதல் வாரம் வரை ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் இருந்து வாங்கப்பட்டது.
இது தற்போதைய நிலையில் 589 மெகா வாட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று தொடர்ந்து விசும். இதன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி தடையின்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின் வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.