கனமழை எதிரொலி – அதிகரிக்கும் காற்றாலை மின்சார உற்பத்தி
குமரி: தென்மாவட்டங்களில் பெய்த கனமழை எதிரொலியால் காற்றாலை மூலம் இந்த ஆண்டு அதிகபட்ச மின்சாரம் உற்பத்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் காற்றாலைகளால் இந்த ஆண்டு அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது என்று காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் நம்புகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் புனல் மின்நிலையங்களும், காற்றாலைகளும் மின்சார உற்பத்தி செய்வதற்கு இயற்கையின் ஒத்துழைப்பும் முழுமையாக தேவைப்படுகிறது.
குறிப்பாக காற்று உள்ள சீசனில் மட்டுமே காற்றாலைகளும், மழைக்காலங்களில் புனல் மின்நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட மின்சார உற்பத்தியை எட்ட முடியும். இருந்தாலும் காலநிலை மாற்றத்தால் மின்உற்பத்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் அதிக பட்ச மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கின்றன. இதனால் இந்த மூன்று மாதங்களும் காற்றாலைகளுக்கு "பீக் லோட்" மாதமாகும்.
இந்த மாதங்களில் சராசரியாக 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். மற்ற மாதங்களில் காற்றாலைகள் இரட்டை இலக்கம் அல்லது மின்சாரமே உற்பத்தி செய்யாமல் கிடப்பில் கிடக்கும்.
தற்போது பீக்லோட் மாதம் தொடங்கப்படாத நிலையில், காற்றாலைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பாக காற்றலைகள் மின்சார உற்பத்தியை தொடங்கின. குறிப்பாக நேற்று முன்தினம் 2,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.