கை விட்ட காற்றாலை... தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தலை தூக்கும் அபாயம்!
நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திடீரென கை விட்டதால் மின் வாரிய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் மின் வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின் வெட்டு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் மின் வெட்டு கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி அளவை விட மின் தேவை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசை இதை தவிர்க்க தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி வருகிறது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது. பல முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகிரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கம் அதிகரித்துள்ளதால் மின் விசிறி, ஏசி போனறவற்றின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மின் பற்றாக்குறை காலங்களில் அபத்வனாக இருக்கும் காற்றாலையும் தற்போது கை விரித்து விட்டதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் சுமார் 10 ஆயிரம் மெகா வாட் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. ஆனால் இரவு நேர கணக்குபடி மொத்தமே 22 மெகா வாட் மட்டுமே தற்போது காற்றாலை முலம் கிடைத்து வருகிறது. இதனால் 626 மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு மேலும் மின் தேவை இருநதால் அதை சமாளிக்க அவ்வப்போது சில இடங்களில் சில மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டும் என்பதால் மினா் வாரியத்தினருக்கு மீண்டும் சோதனை தொடங்கியுள்ளது.