வெளுத்து வாங்கும் காற்று... அசத்தும் காற்றாலைகளின் 'மெகா' மின் உற்பத்தி!
நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசுவதால் நெல்லை மண்டலத்தில் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது. நடப்பு சீசன் காலத்தில் 3 ஆயிரம் மெகாவாட் என்ற மெகா இலக்கை நோக்கி காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரத்து 721 மெகா வாட் என்ற அளவில் மின் நுகர்வு உள்ளது.
மின் தேவையை பூர்த்தி செய்ய அனல், புனல், காற்று ஆகிய மூன்றையுமே நம்ப வேண்டியுள்ளது. இது போதுமானதாக இல்லாததால் பெரும்பாலும் கூடுதல் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது.
காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை சீசன் காலத்தில் மட்டுமே அது கை கொடுக்கிறது. இதையும் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகள் அரசிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தென்மேற்குப் பருவ காற்று கடுமையாக வீசி வருகிறது. இதன் மூலம் நெல்லை மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் காற்றாலைகள் மின் உற்பத்தியை தொடங்கி வருகின்றன.
இந்த காற்றாலைகள் மூலம் சுமார் 1,000 மெகா வாட் வரை மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் தொடர்ந்து நாளுக்கு நாள் மி்ன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 938 மெகா வாட்டை கடந்து 3 ஆயிரம் என்ற இலக்கை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இது நடப்பு காற்று சீசன் காலத்தில் கிடைத்த அதிகபட்ச மின் உற்பத்தியாகும்.
இப்படி மின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அவற்றை எடுத்துச் செல்ல போதிய மின் பாதைகள் இல்லாததால் அவை விரயமாகி வருகின்றன. இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.