அம்மியையும் பறக்க வைக்கும் ஆடிக் காற்று... காற்றாலை மின் உற்பத்தி ஜோர்..!
நெல்லை: ஆடிக் காற்று அபாரமாக வீசி வருவதால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மின் வாரியத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 15 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேலாக மின் நுகர்வுக்காக தேவைக்கப்படுகிறது. ஆனால் இதை விட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறையை சமாளிக்க 1000 முதல் 1500 மெகா வாட் வரை வெளியிடங்களில கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் காற்று பலமாக வீசும்.
3000 மெகாவாட் முதல்
இந்த கால கட்டத்தில் சுமார் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் மெகா வாட் வரை காற்றாலை மூலம் மின் உற்பத்தி கிடைக்கும். தற்போது காற்று நன்றாக வீசு வருவதால் நாள்தோறும் காற்றாலை மூலம் 3500 மெகா வாட் வரை மின் உற்பத்தி கிடைத்து வருகிறது.
கடந்த மாதம் குறைந்த வேகம்
ஆனால் கடந்த மாதம் காற்றின் வேகம் குறைந்ததால் நில நாட்கள் மின் உற்பத்தி குறைவாக கிடைத்து வந்தது. ஆடி மாதம் முடிய இன்னும் ஓரு வாரம் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இரவு வரை 3790 மெகாவாட்
நேற்று இரவு வரை 3790 மெகா வாட் காற்றாலை மூலமாக கிடைத்தது. இதுவே இந்த சீசனில் கிடைத்து அதிக மின்சாரம் ஆகும்.
விற்க வேண்டும்
காற்று சீசனில் தமிழகத்தில் சுமார் 7500 காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியை அரசு முழுமையாக கொள்முதல் செய்வதுடன் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை இருந்து வருகிறது.