காற்றாலைகள் புண்ணியத்தால் சற்றே குறைந்த மின் வெட்டு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மீண்டும் மின்வெட்டு தலை தூக்கி வருகிறது. தற்போது வீட்டு உபயோகம், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என நாள் ஓன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 3 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனால் நகர் பகுதிகளில் குறைந்தது 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 8 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இது முறையாக அறிவிக்கப்படாமல் செய்யப்படுவதால் கிராமப்புற மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவகாற்று காலமான அக்டோபர் வரை காற்றாலை மூலம் நல்ல முறையில் மின்சாரம் கிடைத்தது. இதனால் மின் வெட்டு 2 மணி நேரம் மட்டுமே அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நவம்பர் முதல் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது.
தினமும் 20 மெகாவாட்டுக்கும் குறைவாக காற்றாலை மூலம் கிடைத்ததால் தமிழக மின்வாரியம் திணறி போனது.
சில நாட்கள் அது முற்றிலும் நின்று போனதால் சென்னை நகரிலும் தினமும் 2 மணி நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக காற்று வீச தொடங்கியுள்ளதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. செவ்வாய்கிழமை மாலை வரை காற்றாலை மூலம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக 1268 மெகா வாட்டாக உயர்ந்தது.
இந்த சீசன் காலத்தில் 1268 மெகா வாட் காற்றாலை மூலம் கிடைத்தது இது முதல் தடவையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்த நிலையில் மின்தடை செய்யப்படாததால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மின் வினியோகம் சீராக இருந்ததால் மின் வாரிய துறையினர் நிம்மதி பெருமுச்சுடன் இருக்கின்றனர்.