காற்று வீச்சு அபாரம் - காற்றாலை மின் உற்பத்தி 3000 மெகாவாட்டாக உயர்வு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. தினசரி 3000 மெகவாட் ஆக மின்உற்பத்தி உயர்ந்துள்ளதால் மின் வெட்டு முற்றிலும் நீங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் மின் வெட்டு முற்றிலும் விலக்கி கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் சில மாவட்டங்களில் அவ்வபபோது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடையற்ற மின் வினியோகத்திற்கு கை கொடுக்கும் காற்று சீசன் தொடங்கி விட்டதால் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி 1500 மெகா வாட் என்ற அளவில் இருந்தது. இது அவ்வப்போது 2 ஆயிரம் மெகா வாட்டை கடந்தது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இடைவிடாமல் வீசும் காற்று காரணமாக நெல்லை மாவட்டத்தில் காற்றாலைகள் மிக வேகமாக சுழல தொடங்கியுள்ளன. இதனால் காற்றாலை மின் உற்பத்தி ஜெட் வேகத்தில் உயர தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக அதிகாலை 3471 மெகா வாட்டை தாண்டியது. இது படிப்படியாக ஒவ்வொரு நாளும் சிறிது ஏறியும், இறங்கியும் கிடைத்து வருகிறது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. அவ்வப்போது லேசான சாரலும் வீசி வருகிறது. வெயிலும், குளிரும் மாறி மாறி வருவதால் மின் பயன்பாடு கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக மின் உற்பத்தி உயர தொடங்கியுள்ளது.
காற்றாலை மூலம் சராசரியாக 3000 மெகாவாட் கிடைத்து வரும் நிலையில் கூடங்குளத்திலும் 1000 மெகா வாட்டை மின் உற்பத்தி தாண்டியது. இதனால் நெல்லை மாவட்டத்தில் மின் தடை அறவே இல்லை. இதன் காரணமாக வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.