காற்றாலை மின்சாரம் 4500 மெகாவாட் ஆக உயர்வு: பயனின்றி வீணாகும் நிலை
நெல்லை: தென்மேற்கு பருவக்காற்றின் உபாயத்தால், காற்றாலை மின் உற்பத்தி 4500 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு செல்ல சரியான மின் பாதை இல்லாத காரணத்தால் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் உபயோகமின்றி விரயமாகி வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் தேவை நாள் ஓன்றுக்கு 13 ஆயிரத்து 775 மெகா வாட்டாக இருந்து வருகிறது.
புதிய கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள் தினமும் ஏராளமாக தொடங்கப்பட்டு வருவதால் கூடுதல் மின் தேவை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை காலத்தில் இதில் மின் உற்பத்தி போதிய அளவு இல்லாவிட்டாலும் கூட அதை ஈடுகட்டும் வகையில் சீசன் காலங்களில் அதிக அளவில் மின் உற்பத்தி செய்து விடும்.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 5வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக காற்றாலை மின் உற்பத்தி நெல்லை மற்றும் ஈரோடு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை அரசு குறிப்பிட்ட கட்டணத்தில் கொள்முதல் செய்து கொள்கிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் முழுக்க அரசு கட்டுபாட்டில் உள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்ய முடியாது. அரசு அனுமதித்தால் மட்டுமே பிற இடங்களுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியும். தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.
தற்போது சீசன் காலம் என்பதால் நாள் ஒன்றுக்கு சுமார் 4500 மெகா வாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. தென்மேற்கு பருவமழை சீராக இல்லாவிட்டாலும் கூட காற்று அதிகமாக வீசி வருவதால் காற்றாலைகள் நன்றாக சுற்றி வருவதால் அதிகபட்ச அளவு மின்சாரம் உற்பத்தி ஆகி வருகிறது.
ஆனாலும் காற்றாலை மின் உற்பத்தியை சரியாக பயன்படுத்த முடியவில்லை. காரணம் அரசு குறிப்பிட்ட அளவிலேயே காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது.
காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்லும் அளவுக்கு போதிய மின் பாதை வசதி இல்லை. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக அதிகபட்சமாக 3500 மெகா வாட் என்ற அளவிலேயே மின் உற்பத்தி நிலை நீடிக்கிறது.
மாலை, இரவு நேரங்களில் அதிக காற்று வீசினாலும் இந்த உற்பத்தி அளவை எட்ட முடியவில்லை. கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட அதை எடுத்து செல்ல போதிய அளவு மின் பாதை இல்லாததால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகிறன்றனர். இதனால் பல காற்றாலைகள் சீசன் காலத்திலும் நிறுத்தி வைக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது.