மருத்துவமனையில் ஜெ.... தமிழக, கர்நாடகா முதல்வர்கள் கூட்டம் 3 நாளில் சாத்தியமா? #cauveryverdict
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் யோசனைப்படி தமிழக, கர்நாடகா மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய அரசு உடனே கூட்டுவதற்கான சாத்தியம் குறைவுதான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
காவிரியில் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை 3 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு ஏற்பாடு செய்யவும் யோசனை தெரிவித்துள்ளது.
இதை ஏற்று மத்திய அரசும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் வெள்ளிக்கிழமையன்று பேச்சுவார்த்தை விவரங்களைத் தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்பதை விட பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிப்பதைத்தான் கர்நாடகா எப்போதும் விரும்புகிறது.
இழுத்தடிப்புக்குதான்...
இதனால்தான் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியிருந்தார். இன்றும் கூட பேச்சுவார்த்தைக்கான யோசனையை வரவேற்பதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. ஆக கர்நாடகா முதல்வர் நிச்சயம் மத்திய அரசு ஏற்பாடு செய்யும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கூடும்.
மருத்துவமனையில் ஜெ.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட செய்தி. இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அமைச்சர்கள் குழு
அப்படியான நிலையில் 3 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்கள் சந்திப்பை டெல்லியில் மத்திய அரசு நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆகையால் உச்சநீதிமன்றத்திடம் போய் , தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியாகட்டும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம் என்ன சொல்லி தட்டிக் கழிக்கத்தான் மத்திய அரசு முதலில் யோசிக்கும்.
நெருக்கடி கொடுத்தால்...
ஆனால் உச்சநீதிமன்றம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தால் வேறுவழியே இல்லாமல் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும். அப்படியே மத்திய அரசு கூட்டத்தைக் கூட்டினாலும் ஜெயலலிதா டெல்லி செல்ல மருத்துவர்கள் நிச்சயம் அனுமதிக்கப் போவதும் இல்லை. தமிழக அமைச்சர்கள் குழுதான் டெல்லி செல்ல வாய்ப்புள்ளது.
சித்து ஒப்புக் கொள்வாரா?
தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பேசுவதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். சித்தராமையாவும் ஒப்புக் கொண்டால் மட்டுமே டெல்லியில் இரு மாநிலங்களின் கூட்டம் என்பது சாத்தியமாகும்.
தீர்வு வந்துவிடுமா?
அதே நேரத்தில் நூற்றாண்டுகால பிரச்சனைக்கு இந்த ஒற்றை பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுவிடலாம் என்பதெல்லாம் எந்த நிலையிலும் சாத்தியமே இல்லை; அரை நூற்றாண்டு காலம் பேச்சுவார்த்தையில் கழிந்த பின்னர்தான் காவிரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.