ஒரே மாதத்தில் ஸ்மார்ட் கார்டு கொடுத்துருவோம்.. காமராஜே சொல்லிட்டார்!
இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைத்து மக்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இன்னும் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
வடமாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை நன்கு பிசைந்து அதை பந்து போல் உருட்டி விளையாடினாலும் அந்த பந்து உருண்டை உடையாமல் அப்படியே உள்ளது.
இதுதொடர்பான வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பால், பருப்பு, எண்ணெய் என அனைத்து உணவு பொருள்களிலும் கலப்படம் உள்ளநிலையில் தற்போது அரிசியிலும் கலப்படமா அதுவும் பிளாஸ்டிக்கா என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மக்களின் பீதியை போக்கும் வகையில் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பே இல்லை. அனைத்து அரிசி மூட்டைகளும் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.
ஸ்மார்ட் கார்டு திட்டத்தை பொருத்தவரை முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் கார்டில் இருந்து விவரங்கள் மொழி பெயர்க்கும் போது சில தவறுகள் நடைபெறுகிறது. இதை தடுக்க தாலுக்கா அளவில் மொழிபெயர்ப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
1 கோடி ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வழங்கப்பட்ட கார்டில் தவறு இருப்பின் அதை இணையதளம் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.