இன்னும் 4 நாளில் புழல் ஏரியும் வறண்டுவிடும்... உச்சக்கட்ட தண்ணீர் பஞ்சத்தில் சென்னை
அடுத்து வரும் 4 நாட்களில் சென்னையின் கடைசி குடிநீர் ஆதாரமான புழல் ஏரி முற்றிலும் வறண்டுவிடும் ஆபத்தில் இருப்பதால், சென்னைக்கு வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் வரவுள்ளது என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
சென்னை: சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளில் 3 ஏரிகள் ஏற்கெனவே வறண்டுவிட்ட நிலையில், கடைசி ஆதாரமான புழல் ஏரியும் வேகமாக வறண்டு வருகிறது. இதனால் சென்னைக்கு கடுமையான குடிநீர்ப் பஞ்சம் வரவுள்ளது.
வறட்சியைச் சமாளிக்க நெய்வேலியில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படவுள்ளது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.
இந்த குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை மூலமாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவது வழக்கம்.
வறண்ட ஏரிகள்
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர் அளவு மளமளவென குறைந்தது. கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக வீராணம் ஏரி வறண்டது. இதனால் அங்கிருந்து கிடைத்து வந்த தண்ணீர் கிடைக்கவில்லை.
கைவிட்ட கிருஷ்ணா நீர்
அடுத்தப்படியாக கிருஷ்ணா கால்வாய் மூலம் கிடைத்த தண்ணீரும் நின்று போனது. இதன் காரணமாக சென்னை குடிநீர் தேவைக்கு 4 ஏரிகளையும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் நம்பி இருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
4 நாளில் புழல் ஏரியும் வறண்டுவிடும்
தற்போது புழல் ஏரியில் இருந்து மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் அங்கிருந்து உறிஞ்சப்படுகிறது. இன்னும் 4 நாட்களில் அந்த தண்ணீரும் இல்லாமல் புழல் ஏரியும் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் நீர் சுத்திகரிப்பும் கைகொடுக்கவில்லை
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், " சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்ட காரணத்தால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நெம்மேலி, காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி தண்ணீரும் போதவில்லை
இது தவிர நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரும் வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் போதாத நிலையே உள்ளது.
கல்குவாரி தண்ணீர் உதவவில்லை
அதே போல மாங்காடு பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதற்கும் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.
போர்வெல், கிணறுகள் தண்ணீரும் போதவில்லை
மேலும், போரூர் ஏரி தண்ணீரையும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
பாதியாகக் குறைந்த தண்ணீர் விநியோகம்
இதற்கு முன்பு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சென்னைக்கு வழங்கப்பட்டது. இப்போது 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.