பேனரில் போட்டோ போடாமல் வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது.. சீமான் பொளேர்!
உயிரோடு இடம் பெறுபவர்களின் படம் பேனர்களில் இடம் பெறக்கூடாது என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகம் செய்வது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: உயிரோடு இடம் பெறுபவர்களின் படம் பேனர்களில் இடம் பெறக்கூடாது என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகம் செய்வது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்க தடை விதித்து கடந்த செவ்வாய்க் கிழமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது எனவும், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரமான சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தனி நீதிபதி விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது.
சீமான் எதிர்ப்பு
இதனிடையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று கூறினார்.
தனி இடம் ஒதுக்க வேண்டும்
சுவரில் எழுதும் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கவேண்டும். போராட்டம் மற்றும் கூட்டங்கள் நடத்த தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எப்படி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது?
மற்ற அரசியல்வாதிகள் டிவி சேனல்கள் வைத்திருப்பதாக கூறிய சீமான், அவர்கள் தங்களின் டிவி சேனல் மூலம் பேசிக்கொள்வார்கள் என்றும் எங்களைப் போன்றவர்கள் எப்படி பேசுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். நாங்கள் எப்படி வேட்பாளர்களை அறிமுகம் செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர்களுக்குதான் வாய்ப்பிருக்கும்
பேனர் இல்லாமல் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்றும் சீமான் கூறினார். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மக்களுக்கு தெரிந்த நடிகர்களுக்குதான் வாய்ப்பிருக்கும், மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பிருக்காது என்றும் சீமான் தெரிவித்தார்.