கொடுமை.. ஆதார் எண்ணை கொடுக்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தம்.. மக்கள் அதிர்ச்சி!
ஆதார் எண்களுடன் இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு: ஆதார் எண்களை ரேஷன் கார்டுகளுடன் இணைக்கும் பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட உள்ளது. அதன் கூடவே, ஸ்டார்ட் கார்டுகளுடன் ஆதார் எண்களையும் இணைக்கும் பணிகளும் உணவு பொருள் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ரேஷன் கார்டுகளை வைத்திருப்போரிடம் இருந்து, ஆதார் எண்கள், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த மாதம் முதல், பொருட்கள் வாங்கியதற்கான விவரங்களை பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆதார் எண் மற்றும் செல் போன் எண்களை ரேஷன் கார்டுகளுடன் இணைக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்குவது நேற்றிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்குச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் அதிகாரி, ஆதார் எண்களை ரேஷன் கார்டுகளுடன் இணைக்க 6 மாதங்கள் நேரம் கொடுக்கப்பட்டது என்றும், உண்மையான கார்டுகளை வைத்திருப்போர் ஆதார் எண்களை இணைத்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதார் எண்களை இணைக்காத ரேஷன் கார்டுகள் போலியானவை என்று கருதப்பபட்டு அதற்கான பொருட்கள் வழங்குவதை ஈரோடு மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை நிறுத்தி வைத்துள்ளது என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். உண்மையான ரேஷன் கார்டுகளை வைத்திருப்போர் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு வந்து கார்டுகளை காண்பித்தால் அவருக்குரிய தடை நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.