"கிளிப்பச்சை" கலர் பூசு... இல்லைனா உனக்குதான் லாசு”- வர்ணம் பூசாத 43 படகுகளின் டீசல் மானியம் ரத்து!
சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் கிளிப் பச்சை வர்ணம் பூசாத 43 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை மானியத்தை ரத்து செய்துள்ளது.
ஆட்சியில் இருப்போருக்கு ஏற்றபடி தமிழகத்தின் நிறத்தையும் மாற்றுவது கடந்த சில பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா இடமும் பச்சை பசேல் என்று மாறி விடும்.
இந்த நிலையில், மத்திய அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு நலன்கருதி தமிழகத்தில் இருக்கும் விசைப்படகுகளுக்கு (ஒரே நிறத்தில்) வர்ணம் பூச வேண்டும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு மீன்வள உதவி இயக்குனர் மூலம் விசைப்படகு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அனைவரும் கிளிப்பச்சை நிறத்தில் வர்ணம் பூசுமாறு தமிழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் கிளி பச்சை வர்ணம் பூசாத விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அறிவிப்பு வந்த சமயத்தில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் பச்சை வர்ணம் பூசினார்கள். சென்னை காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் மொத்தம் 25 ஆயிரம் விசைப்படகுகள் உள்ளன.
இதில் 10 குதிரை திறனுக்கு மேல் எஞ்சின் பொருத்தப்பட்ட அனைத்து விசைப்படகுகளுக்கும் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. சில துறைமுகங்களில் விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசாதவர்களுக்கு டீசல் மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை காசிமேடு துறைமுகத்தில் அப்படி விசைப்படகுகளில் வர்ணம் பூசாத உரிமையாளர்களுக்கு டீசல் மானியத்தை மீன்வளத்துறை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து விசைப்படகுகள் உரிமையாளர் ஒருவர், "சென்னை காசிமேடு துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட பதிவு செய்த விசைப்படகுகள் உள்ளன. இதில் 95 சதவீதம் பேர் அரசு அறிவித்தபடி கிளி பச்சை வர்ணம் பூசிவிட்டார்கள். இதற்கென்று மீன்வளத்துறையில் அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு பச்சை வர்ணம் பூசி இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து விசைப்படகுகளின் அருகில் அந்த உரிமையாளரை நிறுத்தி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு பச்சை வர்ணம் பூசிய பின்னர் தான் டீசல் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது காசிமேடு துறைமுகத்தில் 43 விசைப்படகுகள் பச்சை வர்ணம் பூசாமல் இருந்தனர். அவர்களுக்கு இந்த மாதத்துக்கான டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டனர்.
அதன்படி, கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களும் பச்சை கலர் வர்ணம் பூச தொடங்கிவிட்டனர். பச்சை கலர் வர்ணம் பூசினால் மட்டும் போதாது, இன்சூரன்ஸ், துறைமுக வாடகை ஆகியவற்றையும் முறையாக கட்டி இருக்கிறார்களா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் மஞ்சள் நிறம் பூசச் சொல்வார்களோ?