விஜயகாந்த் காலில் விழுந்து கதறிய வேட்பாளர்களின் மனைவிகள்... பணம் கிடைக்குமா?
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை திரும்ப கொடுங்க என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் விழுந்து தேமுதிக வேட்பாளர்களின் மனைவிகள் கதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து 106 இடங்களில் போட்டியிட்டனர். இதில் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் தே.மு.தி.க.சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களிடம் கட்சி மேலிடம் முன்பணமாக பல லட்சம் ரூபாய் வசூலித்தது. மேலும், வேட்பாளர்களும் கடன்வாங்கி தேர்தலுக்கு செலவிட்டனர்.
சட்டசபை தேர்தலில் தேமுதிக இணைந்த மக்கள் நலக்கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. விஜயகாந்த் 3இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை பறிகொடுத்தார். ஓட்டு சதவிகிதமும் கடுமையாக சரிந்தது. வேட்பாளர்கள் பலரும் கடனாளியானதுதான் மிச்சம்.
கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்
தேர்தலுக்கு முன்பே முக்கிய நிர்வாகிகள் பலரும் தேமுதிகவில் இருந்து வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு பின்னரும் பல நிர்வாகிகளை கூறுபோட்டு இழுத்து வருகின்றனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் தேமுதிக தோல்வி குறித்து கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். இதில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டும் என வலியுறுத்தினர். பலரை விஜயகாந்த் வெளியேற்றி வருகிறார்.
நிர்வாகிகள் கண்ணீர்
பல மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், தேர்தலில் சிறப்பாக செயல்படவில்லையென்றும் விஜயகாந்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதாம். வேட்பாளர்கள் பலரும் தாங்கள் சொத்துக்களை அடகு வைத்து தேர்தலை சந்தித்ததாகவும், தற்போது மிகவும் கஷ்டப்படுவதாக கூறி கண்ணீர் விட்டனர்.
ரூ.10 லட்சம்
வேட்பாளர்களுக்கு ஆளுக்கு 10 லட்சம் தருவதாக விஜயகாந்த் வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் வந்தது. பணம் தர சொன்ன தேதி தாண்டியும் வேட்பாளர்களுக்கு பணம் செட்டில் ஆகவில்லை. இதனால் பல வழிகளிலும் விஜயகாந்தை தொடர்புகொள்ள வேட்பாளர்கள் முயற்சி செய்தனர்.
வேட்பாளர்கள் விரக்தி
சுதீஷ் மற்றும் தலைமை கழகம் மூலமாக தகவல் அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் வேட்பாளர்கள் விரக்தியடைந்தனர்.பணம் தொடர்பாக யாரும் தலைமை கழகத்தையோ, விஜயகாந்தையோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் கட்சி நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியானது.
பணம் தர மறுப்பு
தேர்தலில் வேட்பாளர்கள் யாரும் பணம் செலவு செய்யவில்லை, பிறகு எதற்கு பணம் தர வேண்டும் என விஜயகாந்த் கூறியதாக தலைமை கழக நிர்வாகிகள் தோல்வியுற்ற வேட்பாளர்களிடம் கூறியதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கதறிய மனைவிகள்
பணம் தொடர்பாக கட்சி மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தினரை அனுப்பி பிரேமலதாவிடம் பேசி பணத்தை வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார்களாம். கோயம்பேடு தே.மு.தி.க.அலுவலகத்தில், வேட்பாளர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்து, விஜயகாந்த் காலில் விழுந்து, கதறி அழுது, தங்கள் பணத்தை தருமாறு கேட்டனராம். பணத்தை திரும்ப கொடுப்பாரா விஜயகாந்த்?