சசிகலாவை சிறையிலிருந்து மீட்க, 'கூடுவிட்டு கூடு பாய' தயாரான மந்திரவாதி.. மடக்கிப்பிடித்த போலீசார்
பெரம்பலூர்: சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை மிரளச் செய்துள்ளது.
பெரம்பலூரையே அதிர வைத்த மத்திரவாதியின் செயல் பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 10ம் தேதி பெரம்பலூர் எம்.எம். நகரில் உள்ள பங்களா வீட்டில் துர்நாற்றம் வீசியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனைபோட்டனர்.
உள்ளே நுழைந்த போலீசாருக்கு ஏதோ திகில் சினிமா பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. ஏனெனில், வீட்டின் அனைத்து அறைகளிலும் 20க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள், ஆண்மை விருத்தி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் 40 கடல் குதிரைகள், ஆவிகளுக்கான சிலைகளும் இருந்தன.
மேலும், மரப்பெட்டி ஒன்றில், அழுகிய நிலையில் பெண்ணின் உடலும் இருந்தது. இதைப் பார்த்து, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர் போலீசார். இதையடுத்து, அங்கிருந்த மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வெளியே அழைத்து வரும்போது அவர் திடீரென , எனக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார். எதற்கு என்று போலீசார் கேட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான அகோரி பூஜையின் உச்சக்கட்டத்தில் உள்ளேன், எனவே நேரம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இந்த அகோரி பூஜைக்காக, இளம்பெண்ணின் சடலத்தின்மீது அமர்ந்து பல்வேறு பூஜைகள் செய்து எனது மாந்திரீக சக்தியை பெருக்கிக்கொண்டேன். கூடு விட்டு கூடு பாயும் நேரம் பார்த்து நீங்கள் என்னை கைது செய்துவிட்டீர்கள். நான் இந்த இடத்தை விட்டு வெளியே சென்றால் மீண்டும் அந்த சக்தியை பெறுவது கடினம், எனவே விரைவில் சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும், சசிகலாவை முதல்வராக்க நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைவிட அடுத்த அதிர்ச்சியாக, தன்னிடம் 2 ஆயிரம் ஆவிகள் உள்ளன என்றும் அதனை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம் என்று கூறி ஜெர்க் கொடுத்துள்ளார். மந்திரவாதியா அல்லது சைக்கோவா என்ற சந்தேகம் அவரது பேச்சு காரணமாக போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே, அவரை அழைத்து சென்று பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மந்திரவாதி கார்த்திகேயன் அறையில் இருந்து வசிய மை, ஏராளமான இளம்பெண்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இருந்தன. இந்த போட்டோக்கள் இறந்த பெண்களுடையதாக இருக்குமா அல்லது நரபலி கொடுக்க தேர்வு செய்யப்பட்டதா என்ற உச்சக்கட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். மந்திரவாதிவீட்டிலிருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்கும் என்று அந்த ஏரியா மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.