சென்னையில் சொத்துக்காக தங்கையை கடத்திய அண்ணன்கள்... ஆம்பூரில் மீட்ட போலீஸ்
சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சொத்தை எழுதி வாங்க, அண்ணனே ஆள் வைத்து பெண்ணை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடியாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆம்பூரில் பெண்ணை பத்திரமாக போலீசார் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் அத்தாணி காரதோட்டம், கருவல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னி மலை. இவரது மகள் சசிகலா ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.
இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்த சசிகலா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் ரமேஷூடன் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை மாங்காடு கோயிலில் திருமணம் செய்து கொண்டார். அதோடு மட்டுமல்லாது எங்கள் வீட்டு ஆட்களால் ஆபத்து இருக்கிறது என்று அன்றே பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவர் புகாரும் கொடுத்தார்.
திருவேற்காடு பகுதியில் குடியேறியிருந்த இவர்கள், நேற்று பூந்தமல்லிக்கு கடை வீதிக்கு ஜோடியாக வந்துள்ளனர். இவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன்கள், பூந்தமல்லியில் அவரின் கணவர் ரமேஷை தள்ளிவிட்டு விட்டு சசிகலாவை காரில் கடத்திக் கொண்டு 'எங்களை பின் தொடர்ந்தால் சசிகலா கதையை முடித்து விடுவோம் என்று ரமேஷை மிரட்டிவிட்டு சென்னை-பெங்களூரு பைபாஸ் சாலையில் சென்றனர்.
இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் தெரிவித்தார். இதையடுத்து, இளம்பெண்ணை கடத்திச் சென்ற காரை மடக்கிப் பிடிக்க சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ஆம்பூர் புறவழிச் சாலையில், தாலுகா காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், அப்பெண் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டனர். திருவேற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கணவர் ரமேசுடன் போலீசார் சேர்த்து வைத்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சசிகலாவின் பெரியப்பா மகன் நந்தகுமார் மற்றும் அவரின் ஊர் நண்பர்கள் என்பது போலீசாரின் விசாரனையில் தெரிய வந்திருக்கிறது. அத்துடன், சசிகலா பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதால், அதை எல்லாம் எழுதி வாங் சசிகலாவை கடத்தியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.