கருப்பு உடையில் மெட்ரோ ரயில் நிலையம் வந்த செயற்பாட்டாளர் அஸ்வினியிடம் போலீஸ் அத்துமீறல்!
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்க கருப்பு உடையில் வந்த அஸ்வினி என்ற பெண்ணிடம் போலீசார் அத்துமீறி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செல்வதற்காக வந்த பெண்ணிடம் போலீசார் அத்துமீறி நடந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் அந்த பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் சென்னையின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆலந்தூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக திரைப்பட துணை இயக்குநராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் உள்ள அஸ்வினி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்னை வடபழனி மெட்ரோ ரயில் மூலம் செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கருப்பு உடையில் இருந்ததால் அவர்களுக்கு டிக்கெட் தர மெட்ரோ ரயில் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். மேலும் இவர்கள் குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வடபழனி போலீசார் அஸ்வினி உள்ளிட்ட 8 பேரை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
ஆடைகளை களைந்து சோதனை
நடந்த விவரங்களை அஸ்வினி முகநூலில் நேரலை ஒளிபரப்பு செய்ததால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் அவரை மட்டும் தனியே அழைத்து சென்று ஆடைகளைக் களைந்து சோதனை நடத்த பெண் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அஸ்வினியை மிரட்டுவதற்காகவே ஒரு முறைக்கு பல முறை இதே போன்று போலீசார் செய்துள்ளதோடு கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
மூச்சுத்திணறல்
உரிமைக்காக போராடச் சென்ற தனக்கு போலீசாரால் நேர்ந்த அவமானத்தால் மனமுடைந்த அஸ்வினி அதையே நினைத்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஆரம்பித்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை
அரசு மருத்துவமனையில் தற்போது அஸ்வினி சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்க சென்ற பெண்ணிடம் பொது இடத்தில் வைத்து போலீசார் அத்துமீறி நடந்துகொண்ட செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போலீசின் அத்துமீறல்
போராட்டக்காரர்களை ஒடுக்க சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். அதனை விடுத்து தனிநபர் அவமானம், துணிந்து போராட்ட களத்திற்கு வரும் பெண்ணிடம் அத்துமீறி நடக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு யார் தந்தது. அஸ்வினியின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.