சென்னை ஆயிரம் விளக்கு பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகந்தி, யோவான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தனலட்சுமி, 40. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
பழனி தனது தம்பியின் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்கிழமையன்று காலையில் இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டில் இருந்த தனலட்சுமியை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் பழனியும் அவரது தம்பி குடும்பத்தினரும் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். இருப்பினும் தனலட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
செவ்வாய்கிழமையன்று மதியம் பழனி வீடு திரும்பிய போது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த தனலட்சுமி காணாமல் போய் இருப்பதை அப்போதுதான் அவர் பார்த்தார். இதனால் தனலட்சுமி வெளியில் சென்றிருக்கலாம் என்று பழனி நினைத்தார். நீண்ட நேரமாகியும் தனலட்சுமி வராததால் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்தார்.
போலீசாரும் தனலட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமையன்று காலை 6 மணியளவில் மக்கீஸ் கார்டனில் உள்ள வீட்டு முன்பு தனலட்சுமி அரை நிர்வாண கோலத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ எரித்துக் கொலை செய்து உடலை வீட்டு முன்பு வீசிவிட்டு சென்றுள்ளனர். இது அக்கம் பக்கத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போன தனலட்சுமி 2 நாட்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தனலட்சுமியின் கொலையில் கணவர் பழனிக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்தில் பழனியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
தனலட்சுமிக்கும், பழனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தான் தனலட்சுமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாக கூறினார். இதனிடையே தனலட்சுமி கொலை வழக்கில் சுகந்தி, யோவான் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் திங்கட்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 4 நாட்களில் தனியாக இருந்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு கொலையில் மட்டுமே குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு கொலைகளில் குற்றவாளிகள் யார் என்பது இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.