7 பேரை மணந்து மோசடி செய்த பலே பெண்.. உடுமலைப்பேட்டையில் கைது!
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 7 பேரை மோசடியாக திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மாரியம்மாள். பல்லடத்தைச் சேர்ந்தவர். இவர் மீது செல்வக்குமார் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னையும் மேலும் 6 பேரையும் பொய்யான தகவல்களைக் கூறி மாரியம்மாள் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவரிடம் நான் உள்பட 7 பேருமே, பணம், நகைகளை ஏமாந்துள்ளோம். மாரியம்மாளைக் கைது செய்து எங்களிடமிருந்து அவர் பறித்த நகை உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாரியம்மாளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் உடுமலைப்பேட்டையில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து மாரியம்மாள் கைது செய்யப்பட்டார்.
ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரைத் திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் உண்மை நிலைமை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.