"டவுரி" கொடுக்க வக்கில்லை... கல்யாணம் கேக்குதா.. பெண்ணை வீடு புகுந்து தாக்கிய மாப்பிள்ளை வீட்டார்!
சென்னை: வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்ற காரணத்துக்கா கல்யாணத்தை நிறுத்திய வாலிபர், அதுகுறித்து அப்பெண் நியாயம் கேட்டபோது அவரை சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மூத்த மகள் கங்கா. 28 வயதான இவர் மகிந்திரா சிட்டியில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். கங்கா கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகார்: தைலாவரம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சுதாகரன் (30). இவருக்கும் எனக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டு பெரியோர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, மலேசியாவுக்கு சுதாகரன் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து எனக்கு தினமும் போன் செய்து பேசுவார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள திருமணத்துக்காக, கடந்த ஜூலை மாதம் தைலாவரத்துக்கு வந்த சுதாகரன், எனக்கு போன் செய்து உன்னை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் எதற்காக என்று கேட்டதற்கு, எனக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்க உள்ளது என்று கூறி, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதையடுத்து, சுதாகரன் வீட்டுக்கு எனது பெற்றோர் சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெற்றோர் கூடுதல் வரதட்சணை கொடுத்தால் எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில், சுதாகரன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை எங்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை அடித்து உதைத்தனர். பின்னர், நாங்கள் கேட்கும் 30 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணத்தை கொடுக்க முடியாத உனக்கு எப்படி திருமணம் நடக்கும்? என்று தகாத வார்த்தைகளால் பேசி ஊரை கூட்டி அவமானப்படுத்தினர்.
மேலும், உனது திருமணத்தை நிறுத்தி, உன்னை யாரும் திருமணம் செய்துகொள்ள முடியாத அளவுக்கு செய்வோம். இதனால் நீயும் உன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்களே உன்னையும், உனது குடும்பத்தினரையும் அடித்து கொன்று விடுவோம் என்று சுதாகரனின் குடும்பத்தினர் மிரட்டிவிட்டு சென்றனர்.
என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்தும், கூடுதல் வரதட்சணை கேட்டு நாங்கள் தர மறுத்ததால் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சுதாகரன் மீதும், என்னை அடித்து உதைத்து துன்புறுத்திய அவரது குடும்பத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கங்கா.
இந்த, புகாரை ஏற்ற செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கங்கா குற்றம் சாட்டியுள்ள சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.